ADDED : ஜன 14, 2026 06:19 AM

அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே நடந்த பொங்கல் விழாவில், நந்த குமார் - எம்.எல்.ஏ., சிறுமியருடன் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தார்.
தமிழகம் முழுதும், பொங்கல் பண்டிகை விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது . அதன்படி, வேலுார் மாவட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., ஆகிய கட்சிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கபடி போட்டி, கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகளை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, மேல் அரசம்பட்டு ஊராட்சியில் நேற்று முன்தினம், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.,வும், தி.மு.க., தெற்கு மாவட்ட செயலரான நந்தகுமார் கலந்து கொண்டார்.
அங்கு, புது பானையில் புத்தரிசியிட்டு, பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டார். பின்னர் சிறுவர்- சிறுமியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அப்போது, சினிமா துள்ளல் இசை பாடலுக்கு, அங்கிருந்த சிறுவர்- சிறுமிகளுடன் நந்தகுமார் எம்.எல்.ஏ., நடனமாடி அசத்தினார். நடனமாடிய சிறுமிகளிடம், கண்ணாடியை வாங்கி அணிந்து கொண்டு குத்தாட்டம் போட்டு கொண்டாடி மகிழ்ந்தார். வேலுார் தி.மு.க., இரண்டாக பிரிக்கப்பட்டதில் இருந்தே நந்தகுமார் எம்.எல்.ஏ., அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது. தற்போது எம்.எல்.ஏ., பொங்கல் நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தது, அவரது ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

