'அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மூன்று மடங்கு உயர்வு'
'அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மூன்று மடங்கு உயர்வு'
ADDED : நவ 17, 2024 03:46 AM

சென்னை: இந்திய தொழில் கூட்டமைப்பு, 'மெட்கிளேவ்' சார்பில், 'ஹெல்த்கேர்- 360: சுகாதார சவால்களை சமாளிப்பதும், கையால்வதும் சாத்தியம்' என்ற கருப்பொருளில் ஒரு நாள் மாநாடு, சென்னை, மீனம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு கோடி பேர் பயனடையும் நோக்கத்துடன் துவக்கப்பட்ட இத்திட்டத்தில், இரண்டு கோடி பேர் பயனடைந்துள்ளனர். இது உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய திட்டம் என, உலகவங்கி தலைவர்கள் கூறினர்.
நியார்க் நகரில் நடந்த யு.என்.ஐ., கூட்டத்தில், தொற்றா நோய்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் முன்னோடியாக தமிழகம் விளங்குகிறது என பாராட்டி, விருது வழங்கினர். கடந்த மூன்று ஆண்டுகளில், 650க்கும் மேற்பட்ட விருதுகளை தமிழகத்திற்கு வழங்கியுள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள, வெளிநாடுகளில் இருந்ததும் மருத்துவம் பார்க்க தினமும் தமிழகம் வருகின்றனர் என்பது நமது பெருமை.
இன்சூரன்ஸ் திட்டம், உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
தமிழகத்தில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஓமந்துாரார் பல்நோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளன.
தமிழக மருத்துவ கட்டமைப்பு உலக தரத்திற்கு உயர்த்த பல நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விளைவாக, அரசு மருத்துவமனைகளின் மருத்துவ சேவை தரம் உயர்ந்துள்ளது. அதன் காரணமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மூன்றை ஆண்டுகளில் மூன்று மடங்காக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, சிறந்த மருத்துவசேவையாற்றி வரும் நிறுவனங்கள், மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி அமைச்சர் சுப்பிரமணியன் கவுரவித்தார்.
நிகழ்ச்சியில், தமிழக சி.ஐ.ஐ., தலைவர் ஸ்ரீவச்ராம், சுகாதார பிரிவு தலைவர் சந்திரகுமார், கன்வீனர் இளங்குமரன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.