மூலவரை நேரில் சென்று தரிசிக்கும் திட்டம் நடப்பு சீசனுக்கு பின் பரிசோதிக்கப்படும் தேவசம்போர்டு தலைவர் தகவல்
மூலவரை நேரில் சென்று தரிசிக்கும் திட்டம் நடப்பு சீசனுக்கு பின் பரிசோதிக்கப்படும் தேவசம்போர்டு தலைவர் தகவல்
ADDED : நவ 25, 2024 04:08 AM

சபரிமலை: சபரிமலையில் 18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக மூலவரை நேரில் தரிசிக்கும் வசதி நடப்பு சீசனுக்கு பின்னர் பரிசோதிக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறினார்.
பம்பையில் ஸ்பாட் புக்கிங் வசதி விரிவு படுத்தப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் வந்தால் அனைவருக்கும் தரிசனத்திற்கான பாஸ் வழங்கப்படும். இருமுடிக்கட்டில் பாலிதீன் பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று தந்திரியும் தேவசம்போர்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். என்றாலும் தொடர்ந்து அதிக அளவில் பாலிதீன் வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.
அரசு, தேவசம்போர்ட்டின் நடவடிக்கையால் ஒன்பது நாட்களாக தரிசனம் சுமூகமாக நடைபெறுகிறது. மொத்தம் ஆறு லட்சத்து 12 ஆயிரத்து 290 பேர் தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 3 லட்சத்து 3590 அதிகமாகும். 13 லட்ச ரூபாய் அதிக வருமானமும் கிடைத்துள்ளது.
அப்பம் பிரசாதத்தை பொறுத்த வரை முந்தைய நாள் தயாரிக்கும் அப்பம் தான் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பாக்கெட் அப்பம் தயாரிக்கப்படுகிறது. இதில் காளான் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அப்பம் வாங்கும் போது அதில் இருந்ததாக புகார் இல்லை. பக்தர்கள் இருமுடி கட்டில் வைத்து பல நாட்கள் கழித்து வீடுகளுக்குச் சென்ற பின்னர் இப்படி புகார் கூறுகின்றனர். கடந்த ஒன்பது நாட்களில் நேற்று முன்தினம் 84 ஆயிரம் பேர் வந்தபோதும் அனைவரும் நல்ல தரிசனம் செய்து திருப்தியாக திரும்பி சென்றனர்.
இதனால் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் தேவசம்போர்டுக்கு இல்லை. தேவைப்படுபவர்களுக்கு பம்பையில் ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி வழங்கப்படும். தேவைப்பட்டால் பம்பையில் ஸ்பாட் புக்கிங் கூடுதல் கவுண்டர் திறக்கப்படும்.
ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் வர முடியாத பட்சத்தில் அதை ரத்து செய்ய வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. ஆனாலும் ஏராளமானோர் அதை ரத்து செய்வதாக தெரியவில்லை. 10 முதல் 15 ஆயிரம் பேர் வரை தினமும் வராமல் இருக்கின்றனர். இது வேண்டுமென்றே திட்டமிட்டு யாராவது செய்கிறார்களா என்ற சந்தேகமும் ஏற்படுகிறது.
18 படிகளில் போலீசாரின் பணி நேரத்தை 20-ல் இருந்து 15 நிமிடமாக குறைத்தது நல்ல பலனை தந்துள்ளது. 20 நிமிடமாக இருந்த போது கடைசி ஐந்து நிமிடத்தில் போலீசார் மிகவும் சோர்வுற்று படி ஏற்றும் வேகம் குறைந்தது. கோவிட் காலத்தில் படி பூஜை செய்ய முடியாதவர்களுக்கு பிற நாட்களில் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும்.18 படிகளில் ஏறியதும் கொடி மரத்தின் இரண்டு பக்கங்கள் வழியாக நேரடியாக சென்று மூலவரை வழிபடும் திட்டம் நடப்பு சீசனுக்கு பின்னர் பரிசோதனை ரீதியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக கேரள அரசு, உயர் நீதிமன்றம், மாஸ்டர் பிளான் கமிட்டி, தந்திரி உள்ளிட்ட அனைவரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு மூலவரை தரிசிக்க ஏற்பாடு செய்யும் போது பக்தர்களுக்கு அதிக நேரம் தரிசனம் கிடைக்கும். ஒரு நிமிடத்தில் 80 பேர் மட்டுமே படியில் ஏறுவதால் அந்த 80 பேரும் அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் நேரில் தரிசிக்க முடியும் என்பது தேவசம் போர்டின் கருத்து.
அப்பம் விற்பனையில் இந்த ஆண்டு இரண்டு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 685 ரூபாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இது ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 97 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
அரவணை விற்பனையில் இந்த ஆண்டு 17 கோடியே 71 லட்சத்து 60 ஆயிரத்து 470 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 11 கோடியே 57 லட்சத்து 13 ஆயிரத்து 950 ஆக இருந்தது.
காணிக்கையாக இந்த ஆண்டு 13 கோடியே 99 லட்சத்து 31ஆயிரத்து 625 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ஒன்பது கோடியே மூன்று லட்சத்து 63 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது.
மொத்த வருமானத்தை கணக்கிட்டால் இந்த ஆண்டு 41 கோடியே 64 லட்சத்து 65 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது 28 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 364 ஆக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 13 கோடியே 33 லட்சத்து 79ஆயிரத்து 801 ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.
இவ்வாறு கூறினார்.