சூடு பிடிக்கிறது அரசியல் களம்; எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
சூடு பிடிக்கிறது அரசியல் களம்; எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
ADDED : நவ 26, 2025 11:45 AM

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர். அவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.,க்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார்.
இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார். இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இன்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் இன்று வழங்கினார்.அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.

