ADDED : ஆக 07, 2025 04:36 AM
சென்னை: தமிழகத்தில் பா.ஜ., கூட்டணியை பலப்படுத்துவது தொடர்பாக, வியூகங்கள் வகுக்க, அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ், வரும் 10ம் தேதி சென்னை வர உள்ளார்.
இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில் அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், பா.ஜ., மட்டுமே பெரிய கட்சியாக உள்ளது.
தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக, கூட்டணியை பலப்படுத்திவிட வேண்டும் என்பது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திட்டம். ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், வரும் 10ம் தேதி சென்னை வருகிறார். அவர், கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக அரசியல் நிலவரங்களை கேட்டறிவதுடன், கூட்டணியில் மேலும் கட்சிகளை சேர்க்க, நடவடிக்கை எடுப்பது தொடர்பான வியூகங்களை, பா.ஜ., மூத்த நிர்வாகிகள் வாயிலாக, அ.தி.மு.க., தலைமையிடம் தெரிவிக்க உள்ளார். தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பா.ஜ., 'பூத்' கமிட்டி உள்ளிட்டவை தொடர்பாகவும் கேட்டறிய உள்ளார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.