பெய்யென பெய்யும் பெஞ்சல்! தியேட்டர்களுக்கு இன்று லீவு!
பெய்யென பெய்யும் பெஞ்சல்! தியேட்டர்களுக்கு இன்று லீவு!
ADDED : நவ 30, 2024 10:18 AM

சென்னை: பெஞ்சல் புயல் காரணமாக, மழை பெய்யும் மாவட்டங்களில் இன்று தியேட்டர்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெஞ்சல் புயல் தாக்கத்தால் கன மழை கொட்டி வருகிறது. சென்னையின் மையப்பகுதிகள் மட்டும் அல்லாது புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்குகிறது.
இடைவிடாது கொட்டித்தீர்க்கும் கனமழையால் சாலைகள், தாழ்வான குடியிருப்புகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்க ஆரம்பித்துள்ளது. சென்னை முக்கிய சாலைகளில் பஸ் போக்குவரத்தை தவிர பெரும்பாலும் மற்ற வாகனங்களை பார்க்க முடியாத சூழல் நிலவுகிறது.
பலத்த காற்றுடன் மழை கொட்டி வருவதால் அத்தியாவசிய தேவைகள் தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். சென்னை மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது.
இந் நிலையில் சென்னை உள்ளிட்ட மழை பெய்யும் மாவட்டங்களில் திரையரங்குகள் இன்று இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.