எங்கள் ஆட்சியில் இலவசங்களே கிடையாது: சீமானின் புத்துணர்ச்சி தேர்தல் அறிக்கை
எங்கள் ஆட்சியில் இலவசங்களே கிடையாது: சீமானின் புத்துணர்ச்சி தேர்தல் அறிக்கை
ADDED : மார் 20, 2026 09:12 AM

சென்னை: 'எங்கள் ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர் மட்டுமே இலவசம். மற்றவற்றுக்கு, உற்பத்தி செலவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும் என்பது உள்ளிட்ட புத்துணர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகளை, நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு நிகழ்ச்சி, சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடந்தது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட, வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர். தேர்தல் அறிக்கை, 49 தலைப்புகளில், 457 பக்கங்கள் கொண்டதாக தயாரிக்கப்பட்டு உள்ளது.
அதன் விபரம்:
*எங்கள் ஆட்சியில் கல்வி, மருத்துவம், குடிநீர் மட்டுமே இலவசம். மற்றவற்றுக்கு, உற்பத்தி செலவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்
* தமிழகத்திற்கு ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும். திருச்சி, சென்னை, கோவை, மதுரை, கன்னியாகுமரி ஆகியவை தலைநகரங்களாக உருவாக்கப்படும். தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி, முதன்மை நிர்வாக மையமாக செயல்படும். அங்கு, தலைமைச் செயலகம், சட்டசபை, வருவாய் மற்றும் பொது நிர்வாகம், மாநில திட்டக்குழு ஆகிய நிர்வாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்
* உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அதேபோல், சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளில், பெண்களுக்கு தனித்தொகுதி போராடி பெறப்படும்
* அனைத்து துறைகளுக்கும் சட்டம் நிறைவேற்றும் அதிகாரம், மாநில அரசுக்கே உண்டு என, மத்திய அரசு சட்டம் இயற்ற பாடுபடுவோம்
* தமிழகத்தில் ஜாதி ரீதியிலான இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்பட்டு, இடஒதுக்கீட்டில் தமிழ்க் குடிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
* அடிப்படை தேவையான குடிநீரை காசுக்கு விற்கும் முறை ஒழிக்கப்பட்டு, அனைவருக்கும் துாய குடிநீர் கட்டணமின்றி வழங்கப்படும்
* நம்மாழ்வார் பெயரில், தஞ்சாவூரில் வேளாண் பல்கலை துவங்கப்படும். ஆடு, மாடு வளர்த்தல், அது சார்ந்த பண்ணை வேலைகள், இயற்கை உரங்கள் தயாரித்தல் ஆகிய அனைத்திலும் பணியாற்றுவோர், அரசு ஊழியர்களாக அறிவிக்கப்படுவர். அரசு ஊழியர்களுக்கான அனைத்து சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படும்
* வேளாண்மையை அரசுப் பணியாக அறிவித்து, விவசாயிகள் அரசு ஊழியர்களாக மாற்றப்படுவர்
*கோவில்களில் வழிபாட்டு கட்டணங்கள் நீக்கப்படும். ராவணனுக்கு கோவில் கட்டப்படும்
*ஒரு மொழி கொள்கையே பின்பற்றப்படும்
* தமிழகத்தில் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்.
இவை உட்பட, ஏராளமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

