"தமிழக அரசியலில் மாற்றம் வந்துருச்சு.," - அண்ணாமலை சொல்கிறார்
"தமிழக அரசியலில் மாற்றம் வந்துருச்சு.," - அண்ணாமலை சொல்கிறார்
UPDATED : மார் 19, 2024 11:01 AM
ADDED : மார் 19, 2024 08:32 AM

தைலாபுரம்: நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் நல்லதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளதாக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று (மார்ச் 19) அளித்த பேட்டியில் கூறினார்.
தமிழகத்தில் வெறுப்பான சூழல்
தைலாபுரத்தில் பா.ம.க., தலைவர் ராமதாஸ் வீட்டில் பா.ஜ., - பா.ம.க., கூட்டணி முடிவானது. பின்னர் அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை இருவரும் கூட்டாக நிருபர்களிடம் பேசினர்.
அன்புமணி கூறியதாவது: 10 ஆண்டு காலமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வருகிறோம். இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம்.
நாட்டின் நலன் கருதி பிரதமர் மோடி தலைமையில் நல்லாட்சி தொடர தமிழ்நாட்டில் மாற்றங்கள் வர இந்த முடிவை எடுத்துள்ளோம். 60 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர்கள் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது வெறுப்பான சூழல் உள்ளது. மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இதற்கென இந்த முடிவை எடுத்துள்ளோம். பிரதமர் மோடி 3வது முறை பிரதமராவார். இவ்வாறு அன்புமணி கூறினார்.

நினைக்கும் மாற்றம் வரும்
பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது:
மக்கள் சக்தியான இந்த பா.ம.க., மோடியின் கரத்தை வலுப்படுத்த இணைந்துள்ளது. இதற்கு ராமதாஸ்சுக்கு நன்றி. ராமதாஸ் கனவை மோடி நிறைவேற்றுவார். இது வலுவான கூட்டணி, புதிய மாற்றத்தை கொண்டு வர விரும்புகின்றனர். இந்த வலுவான கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள். நேற்று இரவில் இருந்து தமிழக அரசியலில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
2026 ல் அனைவரும் நினைக்கும் மாற்றம் வரும். மோடியின் மேடையில் ராமதாஸ், அன்பு மணி ராமதாஸ் அமர வேண்டும். இதற்கென இன்று அவசர, அவசரமாக சேலம் வந்தோம். இந்தியாவுக்கு வழிகாட்டும் தலைவராக ராமதாஸ் இருப்பார். அவருக்கு நல்ல மரியாதை அளிப்போம். 10 தொகுதிகளில் பா.ம.க., போட்டியிடும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

