அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடையில்லை: ராமதாஸ் மனு தள்ளுபடி
அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடையில்லை: ராமதாஸ் மனு தள்ளுபடி
UPDATED : ஆக 08, 2025 10:05 PM
ADDED : ஆக 08, 2025 08:50 PM

சென்னை: மாமல்லபுரத்தில் நாளை நடக்கும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை எனக் கூறியுள்ள சென்னை ஐகோர்ட், அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஆக., 17 ல் நடக்கும் என ராமதாஸ் அறிவித்துள்ளார். போட்டிக்கு, ஆக.,9ல் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என அன்புமணி தரப்பும் அறிவித்துள்ளது.
அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கேட்டு ராமதாஸ் தரப்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை இன்று (ஆகஸ்ட் 08) ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணியை இன்று மாலை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார்.
இதன்படி நீதிபதி முன்பு அன்புமணி ஆஜரானார். உடல்நிலை காரணம் காட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் ராமதாஸ் ஆஜரானார். இருவரிடமும் நீதிபதி விசாரணை நடத்தினார். இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது தரப்பு வாதங்களை முன் வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணி கூட்டிய பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை எனகூறி ராமதாஸ் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து திட்டமிட்டபடி அன்புமணி தலைமையில் நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
நாளை ராமதாஸ் மேல்முறையீடு
இதனிடையே, சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராமதாஸ் நாளை காலை சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளார்.

