''முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை'' : கமல் பேச்சு
''முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை'' : கமல் பேச்சு
ADDED : பிப் 21, 2024 12:19 PM

சென்னை: ''முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. என்னை அரசியலில் இருந்து வெளியேற்றுவது கடினம்'' என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். கூட்டணி பற்றி பேசிய கமல், ''விரைவில் நல்ல செய்தி வரும்'' என்றார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7வது ஆண்டு துவக்க விழா, ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. முன்னதாக அலுவலகத்தின் முன்பாக தொண்டர்கள் மத்தியில் கமல் பேசியதாவது: முழு நேர அரசியல்வாதி என யாரும் இல்லை. முழு நேர அப்பனும் இல்லை, முழு நேர கணவனும் இல்லை, எந்த பிள்ளையும் இல்லை. 90 ஆயிரம் பேர் ஓட்டு போடாததால் நான் கோவையில் தோற்றேன்.
அரசியல் வியாபாரிகள்
ஒட்டுமொத்த இந்தியாவில் முழுநேர குடிமகனாக கூட இல்லாமல் 40 சதவீதம் பேர் ஓட்டுக்கூட போடாமல் இருக்கின்றனர். என்னை அரசியலுக்கு வரவைப்பது கஷ்டம் என்றார்கள். என்னை வெளியேற்றுவது அதைவிட கடினம். நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அல்ல; சோகத்தில் வந்தவன். எனது அரசியல் பயணம் துவங்கி விட்டது; இனி அழுத்தமாக நடைபோடுவோம்.
நீங்கள் சக அரசியல்வாதிகள் என நினைப்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல வியாபாரிகள். அவர்களை பார்த்து ஆசைப்படாதீர்கள், இது வேறு அரசியல். நாளைய சமுதாயத்திற்கு தேவையான அரசியல். முதலில் தேசம், அடுத்து தமிழகம், பிறகு தான் மொழி. விவசாயிகளுக்கு தமிழக அரசு செய்த 10 சதவீதம் கூட மத்திய அரசு செய்யவில்லை.
எதிரிப்படை
எதிரிப்படையை நடத்துவதுபோல் விவசாயிகளை நடத்துகிறது மத்திய அரசு. படையெடுத்து வரும் எதிரிகளுக்கு என்ன வரவேற்பு கொடுப்பார்களோ அது டில்லியில் நடக்கிறது. டில்லியில் விவசாயிகள் போராடுவதை தடுக்க ஆணிப்படுக்கை போட்டிருக்கிறார்கள். தேசத்தின் குடியுரிமையே ஆட்டம் கண்டுள்ளது.
அதிக லோக்சபா சீட்களை கொண்டுள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி கிடைக்கிறது. தமிழகம் அளிக்கும் ஒரு ரூபாயில் 29 பைசா தான் மத்திய அரசு வழங்குகிறது. தெற்கு தேய்ந்தால் கூட பரவாயில்லை என மத்தியில் உள்ளவர்கள் நினைக்கிறார்கள். ஓட்டுக்கு காசு வாங்குவதை நிறுத்தினால் ஏழ்மை ஒழியும். இவ்வாறு அவர் பேசினார்.

