முருகன் பாடலுக்கு விஜய் ஆடியது தவறில்லை: செங்கோட்டையன்
முருகன் பாடலுக்கு விஜய் ஆடியது தவறில்லை: செங்கோட்டையன்
ADDED : பிப் 05, 2026 03:22 AM

கோபி: “முருகன் பாடலுக்கு விஜய் ஆடியது தவறில்லை,” என, த.வெ.க., நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கூறினார்.
கோபியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கரூரில், 41 பேர் பலியான சம்பவத்தை வைத்து, த.வெ.க., தலைவர் விஜயை நோக்கி அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
கேள்விகளை கேட்க, அவர் என்ன சி.பி.ஐ., அதிகாரியா? தனக்கு தொடர்பில்லாத விஷயங்களை பேசுவதை பழனிசாமி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, கரூர் சம்பவம் தொடர்பாக த,வெ.க., தலைவர் விஜய் இருமுறை விளக்கம் அளித்து விட்டார். அவர்களுக்கே தோன்றாத சந்தேகங்களும் கேள்விகளும், பழனிசாமிக்கு ஏற்படுவது ஏன்?
மத்திய பட்ஜெட் குறித்து விஜய் ஏன் கருத்து கூறவில்லை என கேட்கின்றனர். தமிழகத்தில் த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், இப்படிப்பட்ட பட்ஜெட்கள் குறித்து விஜய் கருத்து சொல்வார்.
த.வெ.க., மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகன் பாடல் பாடினர். அப்போது விஜயை ஆடிப்பாட அழைத்தனர். முருகன் பாடல் என்பதால், விஜயும் மறுக்காமல் ஆடினார்.
அதை, இப்போது கேள்வி கேட்கும் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனும், இதே போல ஆடியிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் வேலுமணியும் காலில் சலங்கை கட்டி பல நிகழ்ச்சிகளில் ஆடியுள்ளார். அப்போதெல்லாம் எழாத பிரச்னை, விஜய் ஆடியதும் எழுவது ஏன்?
'திரைப்படங்களில் நடிப்பதற்காக, விஜய் பிளாக்கில் பணம் வாங்கியுள்ளார்' என முன்னாள் அமைச்சர் சீனிவாசன் உள்ளிட்டோர் கூறியிருப்பது அவர்களுடைய கற்பனை. அந்தக் குற்றச்சாட்டை அவர்கள் நிரூபிக்க வேண்டும். வாயில் வந்ததையெல்லாம் பேசக்கூடாது.
என் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், ஒரே மணித்துளியில், என்னை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டனர். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க வேண்டும் என கூறியதற்காக, எனக்கு அப்படியொரு தண்டனை அளித்தனர்.
ஆனால், இப்போது எல்லாரையும் இணைக்க, தலைகீழாக தோப்புக்கரணம் போடுகின்றனர்; நடக்கவில்லை. ஒவ்வொருவரும் கெஞ்சிக் கொண்டிருக்கின்றனர்.
வரும் சட்டசபை தேர்தலில், வெளிநாட்டில் வாழும் தமிழர்களும், த.வெ.க.,வுக்கு ஓட்டுப்போட தயாராக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

