பனி மூட்டம் இருக்கும்; வறண்ட வானிலை நிலவும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
பனி மூட்டம் இருக்கும்; வறண்ட வானிலை நிலவும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
ADDED : ஜன 03, 2025 02:06 PM

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜன., 3) முதல் வரும் ஜன., 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். தமிழகத்தில் இன்று (ஜன., 3) முதல் வரும் ஜன., 9ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு இன்று முதல் வரும் ஜன.,5ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.