திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு
திருப்பரங்குன்றம் வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் கேவியட் மனு
UPDATED : ஜன 07, 2026 10:42 PM
ADDED : ஜன 07, 2026 08:38 PM

புதுடில்லி: திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் முதன்மை மனுதாரர் ஆன ராம ரவிக்குமார் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில், கோவில் நிர்வாகம் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கடந்த டிச.,1 ல் உத்தரவிட்டார். இதை எதிர்த்து கோவில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், 'திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான மலை உச்சியில் அமைந்து இருக்கும் தூணில் ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில் கோவில் தரப்பில் தீபம் ஏற்ற அனுமதிப்பதால், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என வலிமையான அரசு அச்சப்படுவது அபத்தமானது. இந்த குழப்பம் அரசு தூண்டிவிட்டால் மட்டுமே நிகழக்கூடும். எந்தவொரு அரசும் தங்கள் அரசியல் நோக்கங்களை அடைய இந்த அளவிற்கு தரம் தாழக்கூடாது' என தமிழக அரசை கடுமையாக சாடியதுடன், கார்த்திகை மாதம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கோவில் நிர்வாகம் தீபத்தூண் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அமைச்சர் ரகுபதி அறிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதன்மை மனுதாரர் ஆன ராம ரவிக்குமார் , சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளார். தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் கூறியுள்ளார்.

