திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு தி.மு.க., அரசுக்கு ஒரு எச்சரிக்கை; அமைச்சர் எல்.முருகன்
திருப்பரங்குன்றம் வழக்கின் தீர்ப்பு தி.மு.க., அரசுக்கு ஒரு எச்சரிக்கை; அமைச்சர் எல்.முருகன்
ADDED : ஜன 08, 2026 08:38 AM

கோவை: ''திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்த வேண்டும்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் வலியுறுத்தினார்.
கோவை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என, உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்திருந்த தீர்ப்பை, டிவிஷன் பெஞ்ச் உறுதி செய்துள்ளது. தி.மு.க., அரசும், மாவட்ட நிர்வாகமும் முறையாக செயல்பட்டிருந்தால், இந்த பிரச்னையே வந்திருக்காது. அவர்கள் இரட்டை நிலைப்பாடு எடுத்தனர்.
குறிப்பிட்ட இடத்தில், கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என, நுாறாண்டுகளுக்கு முன் தீர்ப்பு உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. ஆனால் அதை நிறைவேற்ற, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து பூர்ணசந்திரன் என்ற பக்தர் தீக்குளித்து தியாகம் செய்தார்.
இதற்கு முதல்வர் தான், பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும். டிவிஷன் பெஞ்ச்சின் தீர்ப்பு, தி.மு.க., அரசுக்கு ஒரு எச்சரிக்கை. இதை நிறைவேற்ற வேண்டும். பக்தர்கள் உரிய முறையில், சென்று தீபம் ஏற்ற அனைத்து நடவடிக்கைகளும் அரசு எடுக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின், திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சென்று வணங்கி விட்டு, பூர்ணசந்திரன் வீட்டிற்குச் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை எனில், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., வுக்கு மக்கள் பாடம் புகட்டுவர். தி.மு.க., வை வீட்டுக்கு அனுப்ப, சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி முருக பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் முருகன் கோவில் இடிப்பதை தட்டிக்கேட்ட ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியத்தை போலீசார் தாக்கியுள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜ., அரசு, அயோத்தியில் இதிகாச வரலாற்று சிறப்புமிக்க கோவிலை கட்டியிருக்கிறது. வடமாநிலத்தில் உள்ள கோயில்கள் சர்வதேச தரத்தில் அமைந்துள்ன.
அவற்றை எல்லாம் முதல்வர் ஸ்டாலின், சென்று பார்க்க வேண்டும். கூட்டணி குறித்து, நேரம் வரும்போது, தேசியத் தலைவர்கள் அறிவிப்பர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் பா.ம.க., ஏற்கனவே உள்ளது. அவர்கள் இருப்பது இன்னும் கூடுதல் பலத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

