திருப்பரங்குன்றம் சர்ச்சை: 'அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா?'
திருப்பரங்குன்றம் சர்ச்சை: 'அமைச்சர்கள் அமைதியாக கடந்து செல்வதா?'
ADDED : ஜன 24, 2025 05:12 AM

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த, ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனி ஆதரவாளர்கள் பிரியாணி சாப்பிட்டதற்கு, ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. அதன் விபரம்:
மத்திய அமைச்சர் முருகன்:
ஒரு பிரிவினைவாதியைப் போல் நவாஸ் கனி செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ரகசியப் பிரமாணம் எடுத்துக்கொண்ட எம்.பி., பதற்றமான பகுதியில் அதை அதிகப்படுத்துவது போல செயல்படுவதாகவே கொள்ள வேண்டும். கந்தனின் மலையை காக்க ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.
பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் பிரபு:
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், ஹிந்து கோவில்களின் துாண்கள் உள்ளன. ஹிந்து கோவிலைத்தான் தர்காவாக மாற்றி உள்ளனரா என்ற சந்தேகம் எழுகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது, பிரியாணி உண்ணுவது எந்த வகையில் நியாயம்? மலை மீது பிரியாணி உண்ண, ஆடு மாடுகளை வெட்ட, தன் மதத்தை துாக்கிப் பிடிக்க, முஸ்லிம் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவாளர்கள் முன்வந்துள்ளனர். அதேநேரம், இந்த கொடூரத்தைக் கண்டிக்க, ஹிந்து எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தமிழக அமைச்சர்கள் முன்வராதது ஏன்? சிறுபான்மையினர் ஓட்டுக்காக, பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்களை அவமதிக்கும் வகையில் அவர்கள் நடந்து கொள்ளலாமா?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார்:
தி.மு.க., ஆதரவில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் எம்.பி., நவாஸ் கனி ஆதரவாளர்கள், திருப்பரங்குன்றம் மலையில் பிரியாணி சாப்பிட்டு, தேவையற்ற சர்ச்சைக்கு வித்திட்டுள்ளனர்.
இறைவனை வணங்க வேண்டும் என்பது அவர்கள் எண்ணமாக இல்லை. பிரியாணி போன்ற அசைவ உணவுகளை சாப்பிட்டு, அதன் வழியே ஒரு மத பதற்றத்தை உருவாக்க வேண்டும் என நினைக்கின்றனர்.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக, ஹிந்து கோவில் உரிமையை பாதுகாத்திட, அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், சேகர்பாபு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா போன்றோர் எந்த விதமான கருத்துகளும் சொல்லாமல், அமைதியாகக் கடந்து செல்வது, அவர்கள் ஹிந்து விரோதத் தன்மையை உறுதி செய்கிறது.
சிறுபான்மை ஓட்டுகளுக்காக தாஜா செய்யும் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், திருப்பரங்குன்றம் விஷயத்தில் என்ன நிலைப்பாடு எடுப்பர் என்பதை, மக்கள் புரிந்து கொள்வர். ஹிந்துக்கள் ஓரணியில் திரண்டு, முருக பெருமானின் மலையை பாதுகாக்க செயல்படுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
![]() |


