திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத் தூண் வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
UPDATED : டிச 15, 2025 05:08 PM
ADDED : டிச 15, 2025 02:41 PM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்த, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நாளைக்கு (டிசம்பர் 16) ஐகோர்ட் மதுரை கிளை ஒத்திவைத்தது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்' என்றார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் 2வது நாளாக ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன் நடந்து வருகிறது.
கோவில் தரப்பு வாதம்
அப்போது கோவில் தரப்பில், ''இது கார்த்திகை தீபத்தூண் அல்ல. சமணர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட தூண். இரவில் அதில் விளக்கேற்றி வெளிச்சத்தில் விவாதிப்பார்கள். இது போன்ற தூண் அமைப்பு மதுரை மாவட்டத்தில் சில மலைகளில் உள்ளன'' என முன்வைக்கப்பட்டது.
தர்கா தரப்பு
''தனி நீதிபதி தங்களுக்கு போதிய வாய்ப்பு அளிக்கவில்லை. தர்கா நிர்வாகம் கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளதாக தனி நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டது ஏற்புடையதல்ல'' என என தர்கா தரப்பில் வாதிட்டப்பட்டது.
இன்று தர்ஹா தரப்பு, தர்ஹா ஆதரவு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைத்துள்ளனர். நாளைக்குள் அனைத்து தரப்பு வாதங்களையும் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

