UPDATED : ஜன 23, 2026 08:46 PM
ADDED : ஜன 23, 2026 04:28 PM

மதுராந்தகம்: '' விரைவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலே, திமுகவுக்கு கடைசி தேர்தலாக இருக்கும்,'' என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் இபிஎஸ் பேசியதாவது: மதுராந்தகத்தில் பிரதமர் மோடி என்ன பேசப்போகிறார் என நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். பிரதமர் மோடி இந்த மண்ணில் காலடி வைத்ததும் சூரியன் மறைந்துவிட்டது. மக்கள் வெள்ளத்தால் மதுராந்தகம் சூழப்பட்டு உள்ளது.
நியாயமா
நம்மை எதிர்ப்பவர்கள் எத்தகைய வஞ்சக எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் உரியவர்களோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். அந்த தருணம் இப்போது கிடைத்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த காலத்தில் மக்களுக்கு துன்பம், வேதனை மட்டுமே கிடைத்துள்ளது.
ஒவ்வொரு துறையிலும் ஊழல். மக்கள் விரோத ஆட்சி அகற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் வாழ 8 கோடி குடும்பம் சுரண்டப்படுவது நியாயமா?
தமிழகத்தில் கருணாநிதி குடும்பம், ஆட்சியில் அமர்ந்து கொள்ளையடித்து கொண்டுள்ளது. கருணாநிதி முதல்வர் ஆனார். பிறகு ஸ்டாலின் முதல்வர் ஆனார். ஆட்சிக்கு வந்ததும் அவர் செய்த சாதனை ஒன்று ஊழல், ஊழல்.
இன்று ஸ்டாலின் குடும்பம் உலகளவில் பணக்கார குடும்பம் ஆக இருக்கிறது. ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி முதல்வராக வேண்டும் என விரும்புகிறார். கருணாநிதி குடும்பத்தில் பிறந்தவருக்கு தான் கட்சியிலும், ஆட்சியிலும் அதிகாரம். அந்த அடிப்படையில், மகன் உதயநிதியை எம்எல்ஏ, ஆக்கி பிறகு துணை முதல்வர் ஆக்கி உள்ளார்.
பிரதமர் துணை
இனிமேல் அவர்கள் எந்த பதவியிலும் வர முடியாது.இந்ததேர்தல் தான் திமுகவுக்கு இறுதி தேர்தல். திமுகவை வீழ்த்துவோம். பிரதமர் நமக்கு துணை நிற்கிறார்.
நமது இயக்கம் வலிமையான இயக்கம். நமது கூட்டணி வலிமையான கூட்டணி. வெற்றிக் கூட்டணி.இந்த தேர்தலை பொறுத்தவரை குடும்ப வாரிசுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். ஊழல் ஆட்சி குடும்ப ஆட்சிக்கு முடிவு வைக்கும் தேர்தல். நமது வெற்றிக்கு மக்கள் துணை நிற்கின்றனர்.
நமது கூட்டணி கட்சியினர் எழுச்சியோடு பணியாற்றுகின்றனர். நமது கூட்டணி 210 இடங்களில் வெல்லும். பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். இன்று தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்கவில்லை என தவறான தகவலை ஸ்டாலின் சொல்கிறார்.
அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தோம். நிறைய திட்டத்தை கொடுத்தனர். ஆனால், இன்றைய ஆட்சியாளர்கள் மத்திய அரசை எதிர்க்கின்றனர்; பெரும் ஊழல் செய்கின்றனர். உலக தலைவர்கள் பாராட்டும் வகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் பிரதமர் மோடி.இவ்வாறு இபிஎஸ் பேசினார்.
இந்த கூட்டத்தில் பேசிய இபிஎஸ், தினகரனை சகோதரர் என குறிப்பிட்டார்.
அனுமதிக்க மாட்டோம்
அண்ணாமலை பேசியதாவது: கொளுத்தி கொண்டிருந்த சூரியன் மறைந்தது. இது மாற்றத்திற்கான கூட்டம். மழை பெய்கிறது. மழையால் தான் தாமரை இலை மலரும். திமுகவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு நாம் இங்கு இருக்கிறோம். திமுகவுக்கு செல்லும் வாக்குகள் தீயசக்திக்கு செல்லும் ஒட்டு அதை நாம் அனுமதிக்க மாட்டோம் என்றார்.
சூரியன் இல்லை
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: தமிழகத்தை மீட்டெடுக்க நர்மதை மைந்தன் மோடி வந்துள்ளார். மக்கள் மீது அக்கறை கொண்டவர் மோடி. தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி தந்தவர் பிரதமர், தமிழகம் வந்ததும் சூரியன் மறைந்துவிட்டது. இன்று சூரியன் எங்கும் இல்லை. மறைந்து போனது. உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதைத் தவிர, மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை. 11 ஆண்டுகளில் தமிழகத்துக்கு 14 லட்சம்கோடி ரூபாயை பிரதமர் மோடி அளித்துள்ளார்.
பூஜ்ஜிய ஆட்சி
பாமக தலைவர் அன்புமணி பேசியதாவது: திமுக ஆட்சியின் முடிவுக்கு இன்று ஒரு துவக்கம். திமுக அரசு ஒரு ஊழல், கொடுங்கோல் அரசு, பெண்களுக்கு எதிரான, கஞ்சா, சாராய ஆட்சி. திமுக ஆட்சி பூஜ்ஜிய ஆட்சி. இது ஒரு பூஜ்ஜியம் அரசு. தகுதியில்லாதவர்கள், நேர்மையில்லாதவர்கள். தகுதியில்லாதவர்களை விரட்டி அடியுங்கள்.
ஊழலில் முதலிடத்தில் இருக்கிறார்கள். ஊழல் என்றால் திமுக. மணல் கொள்ளையால் 4,750 கோடி ரூபாய் ஊழல். நகராட்சி துறையில் பொறியாளர்கள் நியமனத்தில் 888 கோடி ரூபாய் ஊழல். அதே துறையில் ஒப்பந்தத்தில் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல். அதே துறையில் பணியிட மாற்றத்துக்கு 360 கோடி ரூபாய் ஊழல். டாஸ்மாக் , வரி ஏய்ப்பு ஊழல் 1.82 லட்சம் கோடி ரூபாய். டாஸ்மாக 5 ஆயிரம் கோடி ஊழல். நெல் கொள்முதல் 1,200 கோடி ரூபாய் ஊழல். அனைத்து துறைகளிலும் ஊழல்.மொத்தம் 6 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்த திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும்.
ஸ்டாலின் வாய்திறந்தாலே பொய்யை தவிர எதுவும் வரவில்லை. தோல்வியடைந்த அரசை ஆட்சிக்கு வர விடக்கூடாது. தகுதியில்லாதவர்கள். நேர்மையில்லாதவர்கள். நேர்மையில்லாதவர்கள்.பொய்யான வாக்குறுதி கொடுத்து தமிழகத்தை நரகமாக மாற்றிய அவர்களை விரட்டியடிப்போம்.
கிராமங்களில் கஞ்சா, பெத்தமைன் உள்ளிட்ட போதைப்பொருள் மூலம் இளைஞர்களை நாசப்படுத்தி உள்ளனர். பெண்கள், தாய்மார்கள் திமுகவை மன்னிக்காதீர்கள். இவ்வாறு அன்புமணி பேசினார்.

