இது உங்கள் இடம்: 10 ஆண்டுகளாக எம்.பி.,க்கள் செய்தது என்ன?
இது உங்கள் இடம்: 10 ஆண்டுகளாக எம்.பி.,க்கள் செய்தது என்ன?
ADDED : பிப் 25, 2024 12:42 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
தமிழக அரசியல் கட்சிகளுக்கு என்று தனிக் கொள்கைகள் ஏதும் இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் அமர, அரசியல் கட்சித் தலைவர்கள் எதையும் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளனர் என்பது தான் உண்மை. இவர்களை நம்பி, இவர்களது பின்னால் செல்லும் அப்பாவி தொண்டர்கள் நிலை தான் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
உதாரணமாக, தி.மு.க.,வில் அன்று போர்ப்படை தளபதியாக சுற்றி வந்த வைகோவை கட்சியை விட்டு வெளியேற்ற அவர் மீது, கொலைப்பழி சுமத்தப்பட்டது நாம் அறிந்ததே.
அவரும், வீராவேசமாக ம.தி.மு.க., என்ற கட்சியை ஆரம்பித்து, வேகமாக வளர்ந்தார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக நினைக்கப்பட்டவர், பிற்காலத்தில், இரண்டு திராவிட கட்சிகளுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து, கடைசியில் உதிரிக் கட்சிகளில் ஒன்றாகி போனார்.
தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சிகளும், பா.ஜ.,தான் தங்களது பிரதான எதிரி என கூறியபடி, இரண்டு திராவிட கட்சிகளும் தரும் ஒன்றிரண்டு சீட்கள் மற்றும் சில கோடி ரூபாய் பணத்துக்காக, தங்கள் கொள்கையை துாக்கி கடாசி விட்டன.
அதேபோல, ஜாதி மற்றும் மதரீதியாக செயல்படும் குட்டி கட்சிகளும், இரண்டு திராவிட கட்சிகளின் நிழலில் ஒதுங்கி, இளைப்பாறி கொள்கின்றன.
நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டுமே, தொடர்ந்து தனித்து போட்டியிட்டு, வெற்றி பெறவில்லை என்றாலும், கணிசமான ஓட்டுகளை வாங்கி வருகிறது. நடிகர் கமல் கட்சியும், கடைசியில் தி.மு.க., கூட்டணியில் சங்கமிக்க உள்ளது.
எனவே, வரும் லோக்சபா தேர்தலை தமிழகத்தில் உள்ள எந்த கட்சியும் கொள்கை ரீதியாக சந்திக்கவில்லை. மத்தியில் ஆட்சி, அதிகாரத்தை பிடிக்க வேண்டும்; அதன் வாயிலாக தன் கட்சியினர், 'வளமாக' வேண்டும் என்ற ஒற்றை கொள்கையுடன் தான் இந்த தேர்தலை சந்திக்க இருக்கின்றனர்.
கடந்த 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளாக, தமிழகத்தின் இரண்டு திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் எம்.பி.,க்களாக இருந்தனர். 'இவர்கள், தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்ன செய்தனர், நமக்காக பார்லிமென்டில் குரல் கொடுத்தனரா' என்பது பற்றி வாக்காளர்கள் யோசிக்க வேண்டும்.
மேலும், 'வரும் தேர்தலில், யாருக்கு ஓட்டு போட்டால், மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக நமக்கு கிடைக்கும்' என சிந்தித்து பார்த்து, உங்கள் ஓட்டுகளை பதிவு செய்யுங்கள். பணத்துக்காகவும், ஜாதிக்காகவும், மதத்திற்காகவும் உங்கள் ஓட்டுகளை விலை பேசி விடாதீர்கள்.

