ADDED : ஜன 23, 2024 04:02 AM

பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர் அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சில நாட்களாக, 'உதயநிதி, விரைவில் துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வார்' என்ற செய்தி உலா வருவதை அனைவரும் அறிவோம். இது வதந்தி என்று சம்பந்தப்பட்டவர்கள் மறுத்து பேசினாலும், நடக்க போகும் உண்மை அதுதான்.
கருணாநிதியிடம் இருந்த ராஜதந்திரம், சிறிதளவும் இவர்களிடம் இல்லை என்றால் ஆச்சரியம் தான். ஸ்டாலினை தவிர, அந்த குடும்பத்தில் தமிழக மக்களுக்கு பரிச்சயம் ஆனவர்கள் அழகிரி, கனிமொழி இருவர் மட்டுமே; அவர்களை சாமர்த்தியமாக ஓரங்கட்டி விட்டார் ஸ்டாலின்,
தன் குடும்பத்திலிருந்து யாரையாவது கட்சிக்குள் கொண்டு வந்து விட்டால், கடைசி வரை நம் கட்டுப்பாட்டிலேயே கட்சி இருக்கும் என்று, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே கணக்கு போட்டு, அதை வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டிருக்கிறார், ஸ்டாலின்.
படங்களில் நடித்து உதயநிதி முகத்தை தமிழக மக்கள் மனதில் பதிய செய்து, பின் அரசியலுக்கு காலடி எடுத்து வைத்ததும், உடனடியாக அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுத்து விட்டால், உதயநிதியின் அரசியல் வாழ்வு பிரகாசமாக இருக்கும் என்று, அழகாக கணக்கு போட்டு, அதையும் மிக கச்சிதமாக நிறைவேற்றி விட்டார்.
ஒரு தந்தையாக ஸ்டாலின் நினைத்தது போலவே, அனைத்தும் நடந்திருக்கிறது. தற்போதே, உதயநிதி முதல்வருக்குரிய சகல அதிகாரங்களுடன் தான் பவனி வருகிறார். முதல்வரை விட, பல அமைச்சர்கள் உதயநிதிக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.
இந்த சூழலில், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் என்ன; முதல்வர் பதவி கொடுத்தால் என்ன... யார் என்ன சொல்லப் போகின்றனர்? முதல்வர், தைரியமாக தன் பதவியையே தனயனுக்கு தாரை வார்க்கலாம்; எதிர்த்து ஒருவரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பதவிக்காலம் முடியும் முன்னரே ஸ்டாலின், உதயநிதிக்கு முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
எனவே, உடன்பிறப்புகளே...
தற்போது இருந்து உதயநிதிக்கு நற்பணி மன்றம், பாசறை இவற்றையெல்லாம் ஆரம்பித்து வைத்துக் கொண்டால், உதயநிதியின் கடைக்கண் பார்வை கண்டிப்பாக உங்கள் மேல் விழும்; உங்களின் எதிர்காலமும் பிரகாசமாக இருக்கும்.
இந்த திராவிட கட்சிகள் அல்லாமல், வேறு ஒரு நல்ல மனிதர் வந்துவிட மாட்டாரா என்று தமிழக மக்கள் அனைவரும் ஏக்கத்தோடு காத்திருக்கின்றனர், நம்மை காப்பாற்றும் ரட்சகன் எப்போது வருவார் என்பது, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!

