UPDATED : ஜூலை 30, 2025 08:09 AM
ADDED : ஜூலை 30, 2025 07:14 AM

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூலை 29) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்
ஈரோடு மாவட்டம் அரச்சலுார், வெள்ளியங்கிரி புதுாரை சேர்ந்தவர் தேவராஜ், 47; வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். ஈரோட்டை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.
இது குறித்து சிறுமி அவசர போலீஸ் உதவி எண்-100ஐ தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். அரச்சலுார் போலீசார் விசாரணை நடத்தி, தேவராஜை போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரை நீதிமன்ற உத்தரவுப்படி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
பேக்கரி உரிமையாளருக்கு கம்பி
பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் பேக்கரி நடத்தி வருபவர் கார்த்திக், 28. இவர், ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவியை, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சிறுமியின் உறவினர்கள், நேற்று காலை பேக்கரிக்குள் சென்று கார்த்திக்கை சராமரியாக தாக்கினர். போலீசார், காயமடைந்த கார்த்திக்கை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் மீது போக்சோ வழக்குப்பதிந்து, கைது செய்தனர்.
22 ஆண்டு சிறை
துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த, 16 வயது சிறுமியை, 2019ல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கோவில்பட்டி அருகே கயத்தாறு தெற்கு கோனார்கோட்டையை சேர்ந்த சண்முகையா, 36, என்பவரை, கோவில்பட்டி போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. துாத்துக்குடி போக்சோ நீதிமன்ற நீதிபதி பீரித்தா, சண்முகையாவுக்கு, 22 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று உத்தரவிட்டார்.
சி.ஆர்.பி.எப்., போலீஸ் கைது
ஆவடி காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி, மத்திய அரசு பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர், கடந்த 20ம் தேதி மாலை, கராத்தே பயிற்சி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை பின் தொடர்ந்த சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் சனா சுரேஷ்குமார், 29, என்பவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி, அவரை முகத்தில் தாக்கி, அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், ஆவடி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை விசாரித்த ஆவடி மகளிர் போலீசார், சனா சுரேஷ்குமாரை கைது செய்ய சென்றனர். ஆனால், போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்த அவர், போலீஸ்காரர்களுடன் செல்லாமல் முரண்டு பிடித்தார்.
அதனால், சி.ஆர்.பி.எப்., உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மகளிர் போலீசார், அவர்களிடம் முறையிட்டனர். அதன்பின், உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில், நேற்று சி.ஆர்.பி.எப்., போலீஸ்காரர் சனா சுரேஷ்குமார் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வடமாநில முதியவர் சிக்கினார்
சென்னை, அண்ணா நகரில் உள்ள சூளைமேட்டில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. குடியிருப்பில் தேனீக்கள் கூடு கட்டி இருப்பதால் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக இருந்துள்ளது.
இதையடுத்து, தேனீ கூட்டை கலைப்பதற்காக அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஜெகதீஷ், 60, என்பவரை குடியிருப்பு மக்கள் அழைத்துள்ளனர்.
நேற்று காலை ஜெகதீஷ் தேனீ கூட்டை கலைக்க குடியிருப்புக்கு சென்றுள்ளார். அப்போது தேனீக்கள் வீட்டிற்குள் நுழையாமல் இருக்க குடியிருப்பு மக்கள் வீட்டின் கதவை மூடிவிட்டு உள்ளேயே இருந்துள்ளனர்.
ஜெகதீஷ் கூட்டை கலைத்த பின், குடியிருப்பில் தனியாக இருந்த 16 வயது சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி சத்தம் போடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து ஜெகதீசனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அண்ணா நகர் மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் ஜெகதீசனை கைது செய்து விசாரிக்கின்றனர்.