குற்றம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பர் * சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
குற்றம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பர் * சொல்கிறார் அமைச்சர் ரகுபதி
ADDED : டிச 26, 2024 07:51 PM
சென்னை:''பா.ஜ., ஆளும் மாநிலங்களை விட, தமிழகத்தில் வன்கொடுமை குறைவு. பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்,'' என, அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக ஒரு குற்றமும் நடக்கக்கூடாது; நடந்தால் அதற்கு, பாதுகாப்பு குறைபாடு காரணம் என்பது கண்கூடு என்ற நிலையில், அமைச்சர் ரகுபதியின் பேட்டி பல சந்தேகங்களை எழுப்புகிறது. அதற்கு அவர் விளக்கம் தருவாரா என, அரசியல் மற்றும் சமூகப் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவர் அளித்த பேட்டி:
* அண்ணா பல்கலை வளாகத்தில், மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்போம். இது பொள்ளாச்சி வன்கொடுமை சம்பவம் போன்றதல்ல. பொள்ளாச்சி சம்பவத்தில், முக்கிய பிரமுகர் மகன் ஈடுபட்டிருந்தார். அதை மறைக்க, ஆட்சியாளர்கள் முழு முயற்சி செய்தனர். எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டம் காரணமாக, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கேள்வி: பாலியல் வன்கொடுமையில், சம்பவத்திற்கு சம்பவம் வேறுபடுத்திப் பார்ப்பது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. ஆண் நபர், முக்கிய பிரமுகராக இருந்தால் என்ன, சாதா பிரஜையாக இருந்தால் என்ன, பெண்ணுக்கு தானே பாதிப்பு? சம்பவங்களை தரம் பிரிப்பது நல்லதல்ல என்பது ரகுபதிக்குத் தெரியாதா?
* அ.தி.மு.க., யோக்கியமான கட்சி அல்ல. ராமேஸ்வரத்தில் அ.தி.மு.க., பிரமுகர் ராதாகிருஷ்ணன் மருமகன் ராஜேஷ் கண்ணன், பெண்கள் குளியல் அறையில், 'கேமரா' வைத்து படம் பிடித்துள்ளார்.
கேள்வி: நடந்த சம்பவத்திற்கு நேரடியாக பதில் சொல்லாமல், உடனடி விசாரணையில் இறங்கி குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை கொடுக்க முயலாமல், 'அந்த சம்பவம் நடந்துதே... இந்த சம்பவம் நடந்துதே...' என, சப்பைக் கட்டுப் பேச்சு, யாரை காப்பாற்ற? எதற்காக இந்த அணுகுமுறை?
* தேசிய குற்ற ஆவண காப்பகம், 2022ல் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் எண்ணிக்கை, நாடு முழுதும் லட்சத்திற்கு, 64; தமிழகத்தில் 24 தான். பாலியல் வன்கொடுமை தேசிய சராசரி, 4.6. தமிழகத்தின் சராசாரி 0.7. அந்த வகையில் வன்கொடுமையை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். இதுதான் சாதனை.
கேள்வி: தமிழகத்தில் 24 குற்றங்கள் தான் நடந்தன எனச் சொல்வது, தான் சார்ந்த அமைச்சரவையின் பலவீனம் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது என்ற அடிப்படை உண்மையை ரகுபதி புரிந்து கொள்ளவில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், குற்றம் ஒன்று நடந்தாலும், குற்றம் குற்றம் தானே? இரும்புக் கரம் கொண்டு தண்டனை கொடுத்தால், தொடர்ந்து குற்றங்கள் நடக்காமல் தவிர்க்க வேண்டியது அரசின் கடமை அல்லவா?
* எதுவும் நடக்கவில்லை என்று சொல்ல முடியாது. குற்றம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பர். அதை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது, எங்கள் கடமை. குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியதும் எங்கள் கடமை.
கேள்வி: 'குற்றம் செய்பவர்கள் செய்து கொண்டு தான் இருப்பர்' என்பது என்ன மாதிரியான பதில்? குற்றம் செய்பவர்கள் எனத் தெரிந்தும், அவர்களிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்கலாமா? 'கடமை'யை இப்போது தான் ரகுபதி உணர்ந்தாரா?
* தி.மு.க., ஆட்சியில், பெண்கள் உயர் கல்வி கற்பது அதிகரித்து வருவதை சிதைத்து, பெண்களை வீட்டில் முடக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க பார்க்கின்றன.
கேள்வி: 'பெண்கள் படிக்க வருவதால் தான் இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன' என, எந்த எதிர்க்கட்சியும் சொல்லவே இல்லையே? இவராக ஏன் இப்படி ஒரு கருத்தை வெளிக் கொணர்கிறார்? பெண்கள் வீட்டிலேயே இருந்து விட்டால், இத்தகைய குற்றங்கள் நடக்காது என்று மறைமுகமாகச் சொல்ல வருகிறாரா?
* பா.ஜ., ஆளும் மாநிலங்களில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. வன்புணர்வு செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக, அமைச்சர்களே பேரணி நடத்தினர். மல்யுத்த வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஆதரவாக, மோடி அரசு செயல்பட்டது. மணிப்பூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக இழுத்து சென்றனர். இதுபோல் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் நிர்மலாதேவி என்ற ஆசிரியை, மாணவியரை பாலியல் வன்கொடுமைக்கு தள்ள முயன்ற சம்பவம் நடந்தது.
கேள்வி: நம் மாநிலத்தில் நடக்கும் குற்ற சம்பவத்தை ஏன் தடுக்கவில்லை என்ற கேட்டால், வெளி மாநிலங்களைச் சுட்டிக் காட்டுவது, இந்த அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. சிறுபிள்ளைத்தனமான அமைச்சரின் பேச்சு, கோபத்தை வரவழைக்கிறது. சாதனைக்கு மற்ற மாநிலங்களை உதாரணம் காட்டலாம். இந்த மாதிரி விஷயங்களுக்கா காட்டுவது?
* ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பின், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த, அனைத்து உட்கோட்டங்களிலும், மகளிர் போலீஸ் நிலையத்தை ஏற்படுத்தி வருகிறார். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்தான்.
கேள்வி: போலீஸ் நிலையங்கள் அமைத்தால் போதுமா? குற்றப்பின்னணி உடையவர்களை வீதி உலா செய்ய அனுமதிப்பது தவறில்லையா? இப்படி இருந்தால், பாதிக்கப்பட்ட மாணவியர், பெண்கள், தங்களுக்கு ஏற்படும் பாலியல் அவமானங்களை வெளியே சொல்ல முற்படுவரா? ஊர் முழுக்க மது விற்றுக் கொண்டே, 'மது குடிக்காதீர்கள்' என்று சொல்வது போல்தான் இது!
* அண்ணா பல்கலை சம்பவத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தி.மு.க., தொண்டர் கிடையாது. எங்களுக்கும், அவருக்கும் சம்பந்தம் கிடையாது. அமைச்சரை பார்க்க ஏராளமானோர் வருவர். அவர்கள் எல்லாம் நல்லவரா என்பது தெரியாது. அமைச்சருக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது.
கேள்வி: அமைச்சரவையில் இருப்பவர்களைப் பார்க்க அதிக நிபந்தனைகள், நடைமுறைகள் உண்டு. அதையும் தாண்டி யாராவது வந்து, அவர் அமைச்சரை சந்தித்துச் சென்ற பின், அவரை எங்களுக்கு தெரியாது என்று சொல்ல முடியுமா?
* பாதிக்கப்பட்ட மாணவி குறித்த அடையாளத்தை, நாங்கள் வெளியிடவில்லை. குற்ற வழக்கு எண், வழக்குப்பதிவு விபரம் எதையும், நாங்கள் வெளியிடவில்லை. இதை அரசியலாக்க பார்த்தால், அது நடக்காது.
கேள்வி: அப்படியென்றால், தகவல்கள் வெளியானதற்கு யார் பொறுப்பு?
* அண்ணா பல்கலை நுழைவு வாயிலில், பாதுகாவலர்கள் உள்ளனர். வேறு வழியில், குற்றம்சாட்டப்பட்ட நபர் நுழைந்திருக்கலாம். இது குறித்தும் விசாரணை நடக்கிறது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் தைரியமாக புகார் கொடுப்பதால், ஆணவப் படுகொலை வெளியில் தெரிகிறது; மற்ற மாநிலங்களில் மறைக்கப்படுகின்றன.
கேள்வி: பல்கலை, கல்லுாரிகளில் மாணவ - மாணவியர் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்பதை உறுதி செய்ய வேண்டியது யார் பொறுப்பு?
'அமைச்சரின் கருத்துக்கள் இத்தகைய சந்தேகங்களை எழுப்பி இருப்பதால், சரியான பதில் கிடைக்கும் வரை, மக்களின் அதிருப்தியை போக்க முடியாது' என அரசியல் மற்றும் சமூகப் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.