'அரசியலில் எங்களை எதிர்த்து நிற்போர் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்'
'அரசியலில் எங்களை எதிர்த்து நிற்போர் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்'
ADDED : பிப் 01, 2024 06:46 AM

வேலுார் : ''அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள், அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர்,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம் பொன்னை பகுதியில், பொன்னை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் மேம்பாலம் மற்றும் பொன்னை அரசினர் மேல்நிலை பள்ளியை, தமிழக முதல்வரின், 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின்படி, ஆய்வு செய்த அமைச்சர் துரைமுருகன், நிருபர்களிடம் கூறியதாவது:
கேரள அரசுடன் முல்லை பெரியாறு அணை விவகாரம் குறித்து பேச்சு நடத்த தயார். முல்லை பெரியாறு ஒன்றும் பிரச்னையில்லை.
மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக அரசு ஆய்வு செய்தாலும், அவர்கள் படம் வரைந்தாலும், அந்த திட்டத்திற்கு தமிழக அரசின் ஒப்புதலும், மத்திய அரசின் ஒப்புதலும் வேண்டும். அதையெல்லாம் மீறி, நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். மழை, வெள்ளம் பாதிப்பு குறித்து, நீர் பாசனத்துறை சார்பில், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தை இன்று தான் துவங்கியுள்ளோம். அரசியல் என்பது திருவிளையாடல் தான். நாங்கள் தேர்தல் அறிக்கையை தயார் செய்து வருகிறோம். தி.மு.க., இன்னும் கூட்டணி பேச்சை துவக்கவில்லை.
காங்கிரஸ் மட்டும் பேசிவிட்டு சென்றுள்ளனர். அரசியலில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் அடுத்த தேர்தலில் எங்களுடன் வருவர். பழையவைகளை பேசுவது சரியல்ல. 'இண்டியா' கூட்டணியில் இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை. அதன் பின்னரே யார் இருக்கிறார்கள், யார் செல்கின்றனர் என்பது தெரிய வரும். இவ்வாறு அவர் கூறினார்.