ADDED : ஜூன் 02, 2026 02:20 AM
சென்னை: திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து, 'தாட்கோ' புதிய அறிவிப்புகள் வெளியிட்டு உள்ள நிலையில், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில், பயிற்சி குறித்த எந்த தகவல்களும் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமான, 'தாட்கோ' சார்பில், பழங்குடியினர் மற்றும் பட்டியலின இளைஞர்களுக்கு, 35க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, அரசு இலவசமாக வழங்கி வருகிறது.
தாட்கோ திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்த, முதல் அறிவிப்பு, கடந்த 27ம் தேதி வெளியானது.
அதன்படி, அழகுக் கலை, சிகை அலங்காரம், கணினி பயிற்சிகளுக்கு, இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என, மேலாண்மை இயக்குநர் கந்தசாமி அறிவித்திருந்தார்.
ஆனால், தாட்கோ அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இந்த பயிற்சிகள் தொடர்பான எந்த தகவலும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என புகார் எழுந்து உள்ளது.
இப்பிரச்னையில் அதிகாரிகள் கவனம் செலுத்தி, இணையதளத்தை புதுப்பிப்பதோடு, விண்ணப்ப நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் என, எஸ்.சி., - எஸ்.டி., இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
