சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: பீஹாரை சேர்ந்த 5 பேர் கைது
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை: பீஹாரை சேர்ந்த 5 பேர் கைது
UPDATED : ஜன 28, 2026 08:17 PM
ADDED : ஜன 28, 2026 05:24 PM

சென்னை: அடையாறு இந்திரா நகரில், சாக்கு மூட்டையில் பீஹார் இளைஞர் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். இளைஞரின் மனைவி மற்றும் குழந்தையை கொலையாளிகள் கொன்றுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை அடையாறு, இந்திரா நகர் 1வது அவென்யூவில், கடந்த 26 ம் தேதி சாலை ஓரமாக, 25 வயது மதிக்கத்தக்க வடமாநில தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டி சாலையோரம் வீசப்பட்டு கிடந்தார். முகம் சிதைக்கப்பட்டு இருந்தது. அடையாறு போலீசார் விசாரித்து வந்தனர். கொல்லப்பட்ட வாலிபரின் அங்க, அடையாளங்ளுடன் படம் பிடித்து, பெசன்ட் நகர் பகுதிகளில் பணியாற்றும் வடமாநில தொழிலாளிர்களிடம் விசாரித்தனர்.
கொல்லப்பட்ட வாலிபர், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த கவுரவ குமார், 24, என்பதும், திருமணமாகி முனிதாகுமாரி என்ற மனைவி இருப்பதையும் போலீசார் கண்டறிந்து உள்ளனர். இது தொடர்பாக சிலரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் அவர்கள் குடும்பத்தையே கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக தெரிவித்தனர். மேலும் அவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மத்திய கைலாஷ் பகுதியில் கூவம் ஆற்றங்கரை பகுதியில் குழந்தையின் உடலை போலீசார் கைப்பற்றினர். மேலும், முனிதா குமாரி உடலை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் சிக்கந்தர், ரவிந்திரநாத் தாகூர், நரேந்திர தாகூர், பிகாஷ் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர், 30 என்பவர், கொல்லப்பட்ட வாலிபரின் உடலை, இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்தவர்களில் ஒருவர் என, தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

