ADDED : ஜன 25, 2024 01:55 AM
திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு, பிரதமர் மோடி, கடந்த, 20ல் வந்தார். அதை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் பகுதியில் துாய்மைப் பணி, தனியார் அவுட்சோர்சிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
துாய்மைப் பணியில் ஈடுபட்டோருக்கு, ஜன. 19ம் தேதி, ஸ்ரீரங்கம் 'அம்மா' உணவகத்தில் இருந்து, உணவு எடுத்து செல்லப்பட்டது. குப்பையுடன் இருந்த லாரியில், சாப்பாடு கொண்டு செல்லப்பட்டதை அறிந்தவர்கள், வேதனை அடைந்தனர்.
இதை வீடியோ மற்றும் போட்டோ எடுத்த சமூக ஆர்வலர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்து சென்றனர். அதை தொடர்ந்து, குப்பை லாரியில் உணவு எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, தனியார் அவுட்சோர்சிங் நிறுவனத்திடம், மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன்படி, தனியார் நிறுவன டிரைவர் உட்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.