எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விபரங்கள் வழங்க அவகாசம்
எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்கு விபரங்கள் வழங்க அவகாசம்
ADDED : பிப் 01, 2024 05:46 AM

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை அளிக்க, தமிழக அரசுக்கு ஏப்ரல் 2 வரை, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
இழுத்தடிக்கும் நிலை
நாடு முழுதும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் பல, சிறப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிறப்பு நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு, உயர் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெற்று, இழுத்தடிக்கும் நிலையும் உள்ளது.
எனவே, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை விரைந்து முடிக்கஏதுவாக, அவற்றை கண்காணிக்கும்படி, உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
அரசுக்கு உத்தரவு
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தபோது, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன; அந்த வழக்குகளின் விசாரணை நிலை என்ன என்பது குறித்த விபரங்களை, ஜனவரி 30க்குள் அளிக்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, வழக்கு முதல் பெஞ்ச் முன், நேற்றுவிசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் நிசார் அகமது, மக்கள் பிரதிநிதிகள் சிலருக்காக ஆஜராகி உள்ளதால், தன்னால் நீதிமன்றத்துக்கு உதவியாக செயல்பட இயலாது என்றார். அதனால், அவருக்குப் பதில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவனை, முதல் பெஞ்ச் நியமித்தது.
அவகாசம்
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், ''எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன; இதர வழக்குகளின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால், அறிக்கை அளிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, விசாரணையை, ஏப்ரல் 2க்கு, முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.