அரிசி, பருப்பு வகைகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி., கூடாது அரசிடம் வணிகர்கள் மனு
அரிசி, பருப்பு வகைகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி., கூடாது அரசிடம் வணிகர்கள் மனு
ADDED : ஆக 23, 2025 10:41 PM
சென்னை:அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு, தற்போது உள்ள, 5 சதவீத ஜி.எஸ்.டி., வரியை நீக்க, ஜி.எஸ்.டி., கவுன்சிலை வலியுறுத்துமாறு, தமிழக அரசிடம், அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனத்தினர் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, சம்மேளன தலைவர் துளசிங்கம், செயலர் மோகன் கூறியதாவது:
அரிசி, பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களுக்கு, 25 கிலோ வரை எடையுள்ள பாக்கெட்களுக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி உள்ளது.
அவை, ஏழை மக்கள் தினமும் பயன்படுத்தும் பொருட்கள். எனவே, அப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியால் மக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
பிரதமர் மோடி அறிவித்தபடி தீபாவளி பரிசாக, ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பில், அரிசி, உளுந்து, துவரம் பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு, ஜி.எஸ்.டி., வரியை முழுதுமாக ரத்து செய்ய வேண்டும்.
மேலும், விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் இடுபொருட்கள் மற்றும் உழவு இயந்திரங்களுக்கான ஜி.எஸ்.டி., வரியையும் ரத்து செய்ய வேண்டும்.
இந்த கோரிக்கைகளை, வரும் செப்டம்பரில் நடக்க உள்ள, 56வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்துமாறு, தமிழக உணவு துறை செயலர் சத்யபிரதா சாஹு.
வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி, வணிக வரித்துறை ஆணையர் நாகராஜ், கூடுதல் ஆணையர் சுபாஷ் சந்திரபோஸ், உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசுவிடம் மனு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.