ADDED : நவ 01, 2025 12:14 AM
சென்னை:மத்திய அரசு பட்டாணி பருப்பு இறக்குமதிக்கு, 30 சதவீதம் வரி விதித்ததற்கு, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, சங்க கவுரவ ஆலோசகர் ஜெயப்பிரகாசம் கூறியதாவது:
மத்திய அரசு, பட்டாணி பருப்பு இறக்குமதிக்கு, 2023 முதல் கலால் வரி விலக்குடன் அனுமதி அளித்தது. கனடா, உக்ரைன் நாடுகளில் இருந்து, நம் நாட்டிற்கு பட்டாணி பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அதிக பட்டாணி பருப்பு இறக்குமதி செய்யப்பட்டதால், அதன் விலை குறைந்தது.
நம் நாட்டில் பயிரிடப்படும் துவரை, உளுந்து, கடலை பருப்பு வகைகளுக்கு, உரிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். தற்போது, குறைந் த பட்ச ஆதரவு விலையை விட, அவற்றின் விலை குறைந்துள்ளன.
இந்த சூழலில், விவசாயிகள் நலன் கருதி, பட்டாணி இறக்குமதிக்கு, 30 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பயன்பெறுவர். இதற்காக மத்திய அரசுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறினர்.

