வடிந்தது வெள்ளம்! சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து ஓ.கே!
வடிந்தது வெள்ளம்! சென்னை-திருச்சி சாலையில் போக்குவரத்து ஓ.கே!
UPDATED : டிச 07, 2024 09:53 PM
ADDED : டிச 03, 2024 07:53 AM

சென்னை; மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.
பெஞ்சல் புயல் காரணமாக கடலோர மற்றும் வட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
மழை விட்ட போதிலும், பல பகுதிகளில் இன்னமும் வெள்ள நீர் வடியவில்லை. சாலைகள் எங்கும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் விழுப்புரம் அருகே அரசூர் பகுதியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியது. உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதை தடுக்க, அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பாலம் உடைந்ததால் மடப்பட்டு அருகே போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. திருச்சியில் இருந்து சென்னை வரும் வாகனங்கள் பண்ருட்டி வழியாக திருப்பி விடப்பட்டன.
இந் நிலையில், சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ள நீர் வடிந்துவிட்டதால் மீண்டும் போக்குவரத்து தொடங்கி உள்ளது. அரசூர், இருவேல்பட்டு இடையே மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளம் வடிந்துவிட்டது. இருப்பினும், வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.