சிவகங்கையில் சோகம்; மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 50 பேர் காயம்
சிவகங்கையில் சோகம்; மஞ்சுவிரட்டு போட்டியின்போது காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 50 பேர் காயம்
ADDED : மார் 02, 2026 05:40 PM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சிவகங்கை திருப்பத்தூர் அருகே அரளிப்பாறையில் பால தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இங்கு மாசிமக திருவிழாவை ஒட்டி இன்று அரசு அனுமதியுடன் மஞ்சு விரட்டு நடந்தது. 250 காளைகள் அவிழ்த்து விடபட்டன. 100க்கும் அதிகமான வீரர்கள் போட்டி போட்டு திமிலை பிடித்து அடக்கினர்.
பல ஆயிரக்கனக்கானோர் மலைக்குன்றின் மீது அமர்ந்து மஞ்சுவிரட்டை கண்டு களித்தனர். தொழுவிலிருந்து மாடுகள் அவிழ்த்து விடுவதற்கு முன் ஆங்காங்கே வயல்வெளிகளில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதில் காளைகள் முட்டி சிங்கம்புணரி அருகே நாட்டார் மங்களம் பகுதியை சேர்ந்த ராமநாதன் வயது 23, சுந்தரராஜ் வயது 48 மற்றும் வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் என மூன்று பேர் இறந்தனர். 3 பேரும் மஞ்சு விரட்டு போட்டியை காண வந்தவர்கள்.
மூன்று உடல்களும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

