கரூரில் நடந்த துயர சம்பவம்: விசாரிக்க தேஜ கூட்டணி சார்பில் குழு அமைப்பு
கரூரில் நடந்த துயர சம்பவம்: விசாரிக்க தேஜ கூட்டணி சார்பில் குழு அமைப்பு
UPDATED : செப் 29, 2025 03:46 PM
ADDED : செப் 29, 2025 03:44 PM

புதுடில்லி: கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பு பற்றி விசாரிப்பதற்காக பாஜ சார்பில் எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரூரில் நடிகர் விஜய் பேசிய பிரசார கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 41 பேர் பலியாகினர். நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சம்பவம் பற்றி விசாரித்து கட்சி தலைமைக்கு அறிக்கை அளிப்பதற்காக பாஜ அகில இந்திய தலைமை ஒரு குழுவை அமைத்துள்ளது.
பாஜ எம்.பி.,யும் நடிகையுமான ஹேமாமாலினி தலைமையிலான இந்த குழுவில், அனுராக் தாக்கூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ் லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே (சிவசேனா), அபராஜிதா சாரங்கி, ரேகா சர்மா, புட்டா மகேஷ் குமார் (தெலுங்கு தேசம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.