மாற்றுக்கட்சியினரை வரவேற்க த.வெ.க., ஆர்வம்: பின்னணி என்ன?
மாற்றுக்கட்சியினரை வரவேற்க த.வெ.க., ஆர்வம்: பின்னணி என்ன?
UPDATED : பிப் 24, 2026 02:00 AM
ADDED : பிப் 24, 2026 01:59 AM

மதுரை: தமிழக வெற்றிக்கழகத்தில் அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில் இருந்து வருவோரை ஆர்வமுடன் வரவேற்கும் பின்னணியில் 234 தொகுதிகளிலும் போட்டியிட 'பழக்கப்பட்ட' முகங்கள் தேவைப்படுவது தெரியவந்துள்ளது.
சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட உள்ள த.வெ.க., தன் தலைமையில் கூட்டணி ஆட்சி என்று அறிவித்தும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டிய நிலைக்கு அக்கட்சி ஆளாகியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அதிகபட்சம் 10 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது. முதல் தேர்தல், செலவழிக்க வேண்டும் என்பதாலும் வசதியுள்ள த.வெ.க., செயலாளர்கள், நிர்வாகிகளை மட்டுமே நிறுத்த வேண்டிய நிலையில் விஜய் உள்ளார்.
தனது கட்சியினருக்கு போக மற்ற தொகுதிகளில் பிற கட்சியில் இருந்து வந்தவர்களை நிறுத்த முடிவு செய்துள்ளார். த.வெ.க.,வில் அவர்கள் சேர்ந்ததே, 'விரும்பிய தொகுதிகளில் போட்டியிட 'சீட்' தரப்படும்' என்ற உத்தரவாதத்தால்தான். அப்படிதான் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் த.வெ.க.,வில் சேர்ந்துள்ளார். இவர் அ.தி.மு.க.,வில் நீலகிரி தொகு தியில் லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு 3வது இடத்திற்கு சென்றவர். இந்த தேர்தலில் அ.தி.மு.க.,வில் 'சீட்' ஒதுக்கமாட்டார்கள் என த.வெ.க.,வில் சேர்ந்திருக்கிறார்.
அதுபோல் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப. கிருஷ்ணன், சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மனோகரன், பிரபாகரன் ஆகியோருக்கு 'சீட்' ஒதுக்கப்பட உள்ளது. பா.ம.க., முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகள் கேத்ரின், இமானுவேல் சேகரன் பேரன் சக்கரவர்த்தி, ரஜினி ரசிகர் மன்ற அசோக் உள்ளிட்டோருக்கும் 'சீட்' ஒதுக்கப்பட உள்ளது.
த.வெ.க., நிர்வாகி கூறியதாவது: முதல் தேர்தல் என்பதால் தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளுடன் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்பது எளிதானது அல்ல. விஜய் பெயருக்காகவும், முகத்திற்காக மட்டும் இளைஞர்கள் ஓட்டு விழலாம். ஆனால் களத்தில் வெற்றி பெற வேண்டுமே. இதனால்தான் மாற்று கட்சியினருக்கும் முக்கியத்துவம் அளித்து வாய்ப்பு வழங்க உள்ளார். அவர்கள் தி.மு.க., - அ.தி.மு.க., தேர்தல் உள்ளடி வேலைகள் குறித்து ஏற்கனவே அறிந்தவர்கள் என்பதால் போட்டியிட்டால் வெற்றி பெற முடியும் . தேர்தல் நெருங்க நெருங்க மாற்றுக்கட்சிகளில் இருந்து இன்னும் பலர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

