ADDED : ஜன 01, 2024 06:32 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே மண் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி தவறான சாலையில் சென்று எதிர்புறம் வந்த சுற்றுலா பயணிகள் வேன் மீது மோதியதில் ஒரு வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் பலியாயினர்.
உத்தரப்பிரதேச மாநிலம் சாரன்பூர் மாவட்டம் ரஹ்நாத் மந்திர் பகுதியை சேர்ந்த அமித் குடும்பத்தினர் 17 பேர் கடந்த 17ம் தேதி ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தனர்.
அங்கிருந்து நேற்றுமுன்தினம் இரவு தனியார் வாடகை வேனில் சூரிய உதயம் பார்ப்பதற்காக கன்னியாகுமரி கிளம்பினர். தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் வந்தனர்.
நேற்று அதிகாலை 2:20 மணிக்கு வல்லநாடு அருகே வந்தபோது அதே சாலையில் எதிரே வேகமாக வந்த மண் டிப்பர் லாரி, வேன் மீது மோதியது. இதில் இடுபாடுகளுக்குள் சிக்கி அமித் மனைவி சுமன் 32, உறவினர் பார்வதி 40 ,சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
மற்றொரு வேனில் வந்த பயணிகள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமுற்ற 14 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஒரு வயது பெண் குழந்தை ஸ்ரீ சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தது.
தொடரும் விபத்துக்கள்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு, முறப்பநாடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளி கடத்தப்படுகிறது. வல்லநாடு மலைச்சரிவில் சரல் மண் திருட்டுத்தனமாக அள்ளப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன் முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி பிரான்சிஸ் மணல் கடத்தலை தடுத்ததற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். எனினும் முறப்பநாடு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் மணல் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது.
சரளை மண் ஏற்ற டிப்பர் லாரிகள் குறுக்கு வழியில் எதிர்சாலையில் செல்வதால் அடிக்கடி உயிர் பலிகள் ஏற்படுகின்றன. முறப்பநாடு பகுதியில் 2017 முதல் தற்போது வரை முப்பதுக்கும் மேற்பட்ட விபத்துகளில் 20 பேர் வரை பலியாகி உள்ளனர்.
நேற்றைய சம்பவத்திலும் டிப்பர் லாரி டிரைவர் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.