கர்நாடகாவில் லாரிகள் 'ஸ்டிரைக்'; அத்தியாவசிய பொருள் வருவதில் சிக்கல்
கர்நாடகாவில் லாரிகள் 'ஸ்டிரைக்'; அத்தியாவசிய பொருள் வருவதில் சிக்கல்
UPDATED : ஏப் 15, 2025 05:36 AM
ADDED : ஏப் 15, 2025 12:33 AM

சென்னை: கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது, தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டீசல் விலை மற்றும் சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து, கர்நாடக லாரி உரிமையாளர்கள், நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால், மாநிலங்களுக்கு இடையிலான, சரக்கு லாரிகள் சேவையில் பாதிப்பு ஏற்படும். காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை உயரக்கூடும்.
இதுகுறித்து, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சம்மேளன தலைவர் தனராஜ் கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக, மஹாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு, தினமும் 4,000 லாரிகள்; அங்கிருந்து தமிழகத்துக்கு தினமும் 3,000 லாரிகள் இயக்கப்படுகின்றன.
தமிழகத்தில் இருந்து ஆடைகள், வெல்லம், தேங்காய், மஞ்சள், முட்டை, ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படுகின்றன. பிற மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு மக்காச்சோளம், பருப்பு, பூண்டு, எண்ணெய், வெங்காயம் உள்ளிட்டவை கொண்டு வரப்படுகின்றன.
கர்நாடகாவில் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால், தமிழகத்தில் இருந்து கர்நாடகா வழியாக செல்ல வேண்டிய அனைத்து லாரிகளும் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால், சரக்கு கொண்டு செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகம் - கர்நாடகா இடையே, தினமும் 700 சரக்கு லாரிகள் இயக்கப்படுகின்றன. இவற்றில், 35 சதவீதம் லாரிகளில் காய்கறி, பழங்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, தக்காளி, பீட்ரூட், கோஸ், கேரட் போன்றவை, கர்நாடகாவில் இருந்து சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கொண்டு வரப்படுகின்றன.
லாரிகள் வேலை நிறுத்தத்தால், காய்கறி வரத்தில் பாதிப்பு ஏற்படும். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து கர்நாடகா வழியாக வரும் லாரிகள் தடைபட்டால், வெங்காயம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு, தினசரி வரும் காய்கறி, பழங்கள் வரத்து குறைந்தால், விலைவாசி உயர வாய்ப்புள்ளது என, வியாபாரிகள் தெரிவித்தனர்.