துாத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
துாத்துக்குடி துப்பாக்கி சூடு அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
ADDED : பிப் 01, 2024 12:54 AM
சென்னை:துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட, 17 அரசு அதிகாரிகளும் பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ல், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில், 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம் வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது.
அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்யஉத்தரவிட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட போலீசார், கலெக்டர், வருவாய் துறை அதிகாரிகளை, வழக்கில் இணைத்து, கூடுதல் மனுவை ஹென்றி திபேன் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என்.செந்தில்குமார் அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள, 17 அதிகாரி களும் பதில் அளிக்க, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டது. விசாரணையை, வரும் 21க்கு தள்ளி வைத்தது.
இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் அபாய கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்கக் கோரி, சமூக ஆர்வலரான பாத்திமா தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.
ஆலையின் சுற்றுப்புறத்தில் உள்ள மாசுவை அகற்றுவதற்கான திட்டத்தை வகுத்து, சமர்பிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.