பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்; துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
பாகிஸ்தான் அரசுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்; துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
ADDED : செப் 30, 2025 04:17 AM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் நடத்தியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இரண்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர்.
நாடு பிரிவினையின்போது, ஜம்மு - காஷ்மீரின் ஒரு பகுதியை உரிமம் கொண்டாடி, நம் அண்டை நாடான பாகிஸ்தான் ஆக்கிரமித்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள பகுதியை மீட்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசுகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்களும், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவுடன் இணைவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதனால், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக அடிக்கடி போராட்டங்கள் நடந்து வருகின்றன.
வளர்ச்சிப் பணிகள் உள்ளிட்டவற்றில் தாங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக, ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அவாமி அதிரடி குழு என்ற அமைப்பின் தலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாராபாதில் நேற்று மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இதனால், அங்கு சந்தைகள், கடைகள் மூடப்பட்டிருந்தன. அத்துடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
பாக்., அரசுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி முழக்கங்கள் எழுப்பினர்; பேரணிகள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தானில் வசிக்கும் காஷ்மீர் அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட 12 சட்டசபை தொகுதிகளை ரத்து செய்ய வேண்டும்; மானிய விலையில் கோதுமை மாவு, நியாயமான மின்சார கட்டணம் என, 38 அம்ச கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தை முன்னிட்டு, பஞ்சாப் மாகாணத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய படையினரையும், ஆயிரக்கணக்கான வீரர்களையும் பாக்., அரசு நிறுத்தியுள்ளது. மக்கள் அணி திரள்வதை தடுக்க, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இணைய சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பாக்., ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; 22 பேர் காயமடைந்து உள்ளனர். இதன் காரணமாக, பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் போர்க்களமாக மாறியுள் ளது.