3,300 சதுரடி வரையிலான வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்துமிடம் கட்டாயம்
3,300 சதுரடி வரையிலான வீடுகளுக்கு இரண்டு கார் நிறுத்துமிடம் கட்டாயம்
ADDED : அக் 17, 2025 04:56 AM

சென்னை: தமிழகத்தில், 3,300 சதுர அடி வரையிலான தனி வீடுகளில், இரண்டு கார் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்குவதை கட்டாயமாக்கும் வகையில், பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக கட்டடங்கள், நிறுவன கட்டடங்கள் போன்றவற்றுக்கு, வாகன நிறுத்துமிட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்த விதிகள் தனி வீடுகளுக்கு பொருந்துமா என்பதில் குழப்பம் நிலவியது. இதை கருத்தில் வைத்து, தனி வீடு களுக்கு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக விதிகள் வகுக்கப்படும் என, அரசு அறிவித்திருந்தது.
இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை வெளியிட்டுள்ள அரசாணை:
பொது கட்டட விதிகளில் தனி வீடுகளுக்கான வாகன நிறுத்துமிடம் தொடர்பாக, சில பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இதன்படி, 3,300 சதுர அடி வரையிலான பரப்பளவுள்ள தனி வீடுகளில், இரண்டு கார், இரண்டு இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடத்தை ஒதுக்க வேண்டும். இதேபோன்று, 3,300 சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவுள்ள வீடுகளில், நான்கு கார் நிறுத்துமிடம், நான்கு இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.
அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களில், இணையதள சேவை மற்றும் தொலைத்தொடர்பு வசதிகளுக்கான கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
இதை கருத்தில் வைத்து, ஐ.பி.எஸ்., எனப்படும், 'இன் பில்டிங் சொல்யூஷன்ஸ்' என்ற தலைப்பில், இணையதள சேவை மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் அமைக்கலாம்.
இதில், மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தால் வரையறுக்கப்பட்ட முகவரை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தலாம் என, பொது கட்டட விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.