ADDED : பிப் 01, 2026 06:27 AM

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் டூவீலர் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் பலியாயினர்.
உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கம் மகன் மாதேஷ் 18. உசிலம்பட்டி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். செல்லம்பட்டி அருகே அம்பட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் சஞ்சீவி மகன் ராஜகோபால் 20. தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்தார்.
நண்பர்களான இருவரும் நேற்று உசிலம்பட்டிக்கு டூவீலரில் வந்து விட்டு அம்பட்டையன்பட்டிக்கு திரும்பினர். மதியம் 2:25 மணியளவில் மதுரை ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி முன்பாக சென்ற போது, எதிரே திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டியை நோக்கி வந்த தனியார் பஸ் மோதியதில் இருவரும் பலியாயினர். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
அடுத்தடுத்து விபத்துகள் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி எதிரில் உள்ள உசிலம்பட்டி- - மதுரை ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. கடந்த மே மாதத்தில் ரோட்டோரம் நடந்து சென்ற விவசாயி ஒருவர் பலியானார். 2025 ஆக. 8 ல், கல்லுாரி மாணவர்கள் இருவர் விபத்துக்குள்ளாகினர். ஒருவர் அதே இடத்தில் பலியானார்.
ஆக. 10ல், ஆட்டோ - கார் விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 2025 டிச. 11ல், நடந்த விபத்தில் ராணுவ வீரர் உட்பட இருவர் பலியாகினர்.
தற்போது இருவர் பலியாகியுள்ளனர். மேலும் பல விபத்துகளில் காயங்களுடன் பலர் தப்பியுள்ளனர். குறுகலாக உள்ள இந்த ரோட்டை சீர்படுத்தவும், விபத்து நடக்கும் பகுதி என எச்சரிக்கை அறிவிப்பு வைக்கவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

