UPDATED : பிப் 18, 2024 10:25 AM
ADDED : பிப் 18, 2024 08:41 AM

கிருஷ்ணகிரி அருகே ஒற்றை யானை தாக்கி 2 பேரை அடித்து கொன்றது. இதனால் இப்பகுதிக்கு வனத்துறை உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் பலியான குடும்பத்தினர்கள் இரண்டு இடங்களில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, அன்னியாளத்தை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி வசந்தா, 37. கிராம பணியாளர்; விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை வசந்தாவை விரட்டி சென்று துாக்கி வீசி தாக்கியது. இதில் படுகாயமடைந்த வசந்தா, சம்பவ இடத்திலேயே பலியானார்.
அன்னியாளம் வழியாக தாசரப்பள்ளி கிராமத்திற்கு சென்ற ஒற்றை யானை, அப்பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மனைவி அஸ்வத்தம்மா, 45, என்பவரை தாக்கி கொன்றது. மேலும், அப்பகுதியில் இரு மாடுகளை தாக்கியது. படுகாயமடைந்த மாடுகள் உயிருக்கு போராடி வருகின்றன. அடுத்தடுத்து இரு பெண்கள் யானை தாக்கி பலியானதால், கிராம மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
நுாற்றுக்கணக்கான மக்கள் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் திரண்டனர். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.