திராவிடம் எல்லாரையும் இணைக்கும் முருகன் மாநாட்டில் உதயநிதி பேச்சு
திராவிடம் எல்லாரையும் இணைக்கும் முருகன் மாநாட்டில் உதயநிதி பேச்சு
UPDATED : ஆக 26, 2024 07:36 PM
ADDED : ஆக 26, 2024 06:11 AM

சென்னை: ''திராவிடம் யாரையும் ஒதுக்காது; எல்லாரையும் இணைக்கும்,'' என, அமைச்சர் உதயநிதி கூறினார்.
பழனியில் நடந்த, அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வழியே, அவர் பேசியதாவது:
தி.மு.க., அரசு திடீரென இந்த மாநாட்டை நடத்துவதாக, ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இந்த மாநாடு திடீரென நடத்தப்படவில்லை. மூன்று ஆண்டுகளில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், ஏராளமான சாதனைகளை செய்து விட்டு, இம்மாநாட்டை நடத்துகிறது.
தி.மு.க., அரசு யாருடைய நம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காது. எல்லாருடைய உணர்வுக்கும் மதிப்பு கொடுக்கும் அரசு. அறநிலைய துறையின் பொற்காலம் என்றால், அது, தி.மு.க., ஆட்சி தான். நீதிக்கட்சி ஆட்சியின் போது, ஹிந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு சட்டம் உருவாக்கப்பட்டு, வழிபாட்டு உரிமை உறுதி செய்யப்பட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில், 1,400க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. பழனி கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரியில், மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. விரைவில், மதிய உணவு வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்பது தான். திராவிடம் யாரையும் ஒதுக்காது; எல்லோரையும் இணைக்கும். இதற்கு உதாரணம், அனைத்து ஜாதியினரையும், மகளிரையும் அர்ச்சகராக்கியவர் நம் முதல்வர். அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம், அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் மற்ற துறைகளை போல, ஹிந்து சமய அறநிலைய துறையும் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது. இந்த மாநாடு ஆன்மிக மாநாடு மட்டுமல்லாமல், தமிழர் பண்பாட்டு மாநாடாக நடக்கிறது. ஆன்மிகத்தை எல்லாருக்கும் உடையதாக்கும் வகையில் நடக்கும் முருகன் மாநாடு, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கப் போவது உறுதி.
இவ்வாறு, உதயநிதி பேசினார்.