சென்னை - ராஜஸ்தான் புதிய ரயில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்
சென்னை - ராஜஸ்தான் புதிய ரயில் மத்திய அமைச்சர் துவக்கி வைத்தார்
ADDED : மே 04, 2025 12:38 AM

சென்னை:நாடு முழுதும், 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, ராஜஸ்தான் மாநிலம், பகத் கீ கோதி நகருக்கு புதிதாக ரயில் சேவை துவக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் நடந்த நிகழ்ச்சியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதையடுத்து, சென்னை சென்ட்ரலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட புதிய ரயில் புறப்பட்டு சென்றது.
சென்ட்ரலில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சென்னை சென்ட்ரலில் இருந்து, நாளை முதல் வாரம் தோறும் திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்று கிழமைகளில், இரவு 7:45 மணிக்கு புறப்படும் ரயில், அடுத்த மூன்றாவது நாளில் பகல், 12:15 மணிக்கு பகத் கீ கோதி செல்லும்
பகத் கீ கோதியில் இருந்து, வரும், 7ம் தேதி முதல் வாரம்தோறும் திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு, 11:15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும்
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில், இதுவரை இல்லாத அளவுக்கு, ரயில்வேக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார்.
நாடு முழுதும், 1,300 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கி செல்லும் வகையில், தொழில்நுட்பம் மற்றும் பயணியருக்கான மேம்பாட்டு வசதிகள் செய்யப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய இணை அமைச்சர் முருகன் பேசுகையில், ''தமிழக மக்கள் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை, ரயில்வே அமைச்சகம் உடனடியாக நிறைவேற்றி வருகிறது. தற்போது, சென்னை - பகத் கீ கோதிக்கு புதுரயில் சேவை துவங்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில் திட்டங்களுக்கு, 2014ம் ஆண்டை ஒப்பிடுகையில், தற்போது, 10 மடங்கு நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
77 ரயில் நிலையங்கள், 3,000 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 9 புதிய ரயில் பாதை திட்டங்கள் உட்பட, பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார்.