மத்திய அமைச்சர் ஹெலிகாப்டர் தரையிறங்க சென்னை ஏர்போர்ட்டில் அனுமதி மறுப்பு
மத்திய அமைச்சர் ஹெலிகாப்டர் தரையிறங்க சென்னை ஏர்போர்ட்டில் அனுமதி மறுப்பு
ADDED : அக் 14, 2025 06:41 AM

சென்னை விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது.
மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று மதியம், 2:20 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார்.
மதியம், 2:30 மணிக்கு, தனி ஹெலிகாப்டரில் மறைமலைநகர், 'போர்டு' தொழிற்சாலைக்கு சென்று, அங்கிருந்து காரில் பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையை அடைந்து, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. விழா முடிந்து மாலை, 5:00 மணிக்கு, தனி விமானத்தில் நாக்பூர் செல்லும் வகையில் அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரியில் இருந்து தாமதமாக, மாலை, 4:15 மணிக்கு தான், சென்னை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து உடனடியாக தனி ஹெலிகாப்டரில் மறைமலை நகர், போர்டு தொழிற்சாலை வளாகத்திற்கு சென்றார்.
பின்னர் காரில் எஸ்.ஆர்.எம்., பல்கலை சென்று, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். விழா முடிய தாமதமானதால், தனி ஹெலிகாப்டரில் வருவதற்கு நேரம் அதிகமானது.
இதையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை, ஹெலிகாப்டரை இயக்கியோர் தொடர்பு கொண்ட போது, அமைச்சரின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக, ஹெலிகாப்டர் மாலை, 6:00 மணிக்கு மேல் வானில் பறக்க, மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை, அனுமதி அளிக்க தடை விதித்துள்ளது. அதன் அடிப்படையில், ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, அமைச்சர் காரில் புறப்பட்டு, மாலை 6:50 மணிக்கு, விமான நிலையம் வந்தார். இரவு 7:00 மணிக்கு, தனி விமானத்தில் நாக்பூர் புறப்பட்டார்.