பல்கலை கண்காணிப்பாளர் சொத்து குவிப்பு; சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
பல்கலை கண்காணிப்பாளர் சொத்து குவிப்பு; சி.பி.ஐ., விசாரணைக்கு ஐகோர்ட் உத்தரவு
UPDATED : பிப் 26, 2026 07:51 AM
ADDED : பிப் 26, 2026 05:17 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கண்காணிப்பாளர் கோமதி என்பவர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, லஞ்சம் பெற்று வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், குலசேகரன்கோட்டை வெங்கடேசன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை காமராஜ் பல்கலையில், கோமதி, 2013ல் கருணை அடிப்படையில் இளநிலை எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
தற்போது கண்காணிப்பாளராக பணி புரிகிறார். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளார். சட்ட விரோதமாக மாணவர் சேர்க்கை, நியமனம் மற்றும் பல்கலையின் ஆவணங்களை வெளியே கசிய விடுதல் ஆகிய முறைகேடுகளில் ஈடுபட்டார்.
இதை பல்கலை நிர்வாகம் அறிந்திருந்தும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை. கோமதி வேறு துறைக்கு மட்டுமே மாற்றப்பட்டார்.
முகாந்திரங்கள் இல்லை
இவருக்கு, மதுரை கோமதிபுரம், வண்டியூரில், 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு உள்ளது. பல்கலையின் சில பணியாளர்களுக்கு, 2 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளார். எனினும், பல்கலை நிர்வாகம், 'கோமதி மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள், முகாந்திரங்கள் இல்லை' என கூறி, விசாரணையை முடித்து வைத்தது.
இதன் மூலம், கோமதியை பாதுகாக்கும் வகையில், பல்கலை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் உதவியுடன் விசாரிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
அந்த மனுவை, நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முகேஷ் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை மனதை சரியாக செலுத்தாமல், தபால் நிலையம் போல செயல்பட்டு புகாரை பல்கலை நிர்வாகத்திற்கு அனுப்பியது. பல்கலை நிர்வாகம், 'கோமதி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை' என, புகாரை முடித்து வைத்துள்ளது.
நடவடிக்கை
பல்கலைகளில் ஊழல் நடைபெறுவதை சகித்துக்கொள்ள முடியாது. அது எதிர்கால சந்ததியினரை பாதிக்கும். லஞ்ச ஒழிப்புத்துறை தன் கடமையை முறையாக மேற்கொள்ளவில்லை. எனவே, புகார் மீதான விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்படுகிறது. சி.பி.ஐ., விசாரித்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

