ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது அமெரிக்க போர் கப்பல்கள்
ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது அமெரிக்க போர் கப்பல்கள்
ADDED : ஜன 28, 2026 05:17 AM

டெஹ்ரான்: ஈரான் உடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார பின்னடைவுகள் மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்; 27,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதியாக போராடி வரும் ஈரான் மக்களை, அந்நாட்டு அரசு துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட நடவடிக்கை வாயிலாக கொன்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க, அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியானது.
இதுகுறித்து பேசிய, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'அமைதியாக போராடி வருபவர்களை கொன்றாலும், போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றினாலும், அமெரிக்கா பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது' என எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் என்ற பிரமாண்ட அணுசக்தி விமானம் தாங்கி போர்க் கப்பல் மற்றும் ஏவுகணைகளை தாங்கி செல்லும் நவீன போர்க் கப்பல்களை ஈரானை நோக்கி செல்ல உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, இந்த போர்க் கப்பல்கள் மேற்காசிய கடற்பகுதியை வந்தடைந்துள்ளன. இக்கப்பல்களில் ஈரானை துல்லியமாக தாக்கக்கூடிய டோமாஹாக் ஏவுகணைகள் உள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த போர் மிரட்டலுக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தங்கள் மீது நடத்தப்படும் எந்தவொரு சிறிய தாக்குதலும் முழுமையான போராக கருதப்படும் என, ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் தங்களின் இலக்குகளாக மாறும் என கூறியுள்ளது.
போர் அச்சம் காரணமாக, பல சர்வதேச விமான நிறுவனங்கள் மேற்காசிய நாடுகளுக்கான தங்களின் சேவையை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

