வைத்திலிங்கம் சொத்து 1,057 சதவீதம் உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
வைத்திலிங்கம் சொத்து 1,057 சதவீதம் உயர்ந்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு
ADDED : செப் 24, 2024 10:00 PM
சென்னை:அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், அவரது மகன் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் சொத்து குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தெலுங்கன்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம். நடுத்தர குடும்பத்தை இவர், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ., ஆனார். 2001 - 2006 வரை, தொழில் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தார்.
அவர், 2011 - 2016 காலகட்டத்தில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தார். அதன் பின், 2016 - 2021, ஜூன் வரை, ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார். தற்போதும், ஒரத்தாடு தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக உள்ளார்.
வைத்திலிங்கம், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருங்களத்துாரில், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ் அண்ட் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம், 57.94 ஏக்கரில், 1,453 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், ஐ.டி., நிறுவனங்கள் கட்டவும் தீர்மானித்தது. இதற்கான அரசு அனுமதி பெறுவதற்காக, வைத்திலிங்கத்துக்கு 28 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இப்படி வைத்திலிங்கம் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வைத்திலிங்கம், தன் குடும்ப உறுப்பினர்கள் பெயரில், அளவுக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அவர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த, 2011 - 2026 காலகட்டத்தில், வைத்திலிங்கம் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் அசையும், அசையா சொத்துக்கள், வங்கி இருப்பு, வாகனங்கள் வாங்கிய செலவுகள் என, அனைத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கிட்டுள்ளனர்.
இதன்படி, 2011ல், 32.47 கோடி ரூபாயாக இருந்த சொத்து மதிப்பு, தற்போது, 1,057.85 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து, வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு ஆகியோர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார், சொத்துக்குவிப்பு வழக்கு பதிந்துள்ளனர்.