ADDED : ஜூலை 22, 2026 11:07 PM

சென்னை: முதல் 'வந்தே பாரத்' சரக்கு ரயில், மத்திய பிரதேச மாநிலம் கதிரூ - மஹ்பூ இடையே மணிக்கு, 130 கி.மீ., வேகத்தில் வெற்றிகரமாக இயக்கி சோதனை செய்யப்பட்டது.
சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்கள், பயணியரிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 'வந்தே பாரத் பார்சல்' ரயில் தயாரிப்பு பணிகள் நிறைவு பெற்றன.
மொத்தம் 16 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், மணிக்கு 160 கி.மீ., வேகம் செல்லும் திறன் கொண்டது. உணவு பொருட்கள் பதப்படுத்தும் வசதி, பொருட்களை பாதுகாப்பாக கையாளும் வசதிகள் உள்ளன.
இந்த ரயில், கடந்த மார்ச் மாதத்தில் ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, நாட்டின் முதல் வந்தே பாரத் சரக்கு ரயில், மத்திய பிரதேசத்தில் கதிரூ - மஹ்பூ இடையே, கடந்த சில வாரங்களாக இயக்கி சோதனை நடத்தப்பட்டது.
