சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
சீமான் மீது வருண்குமார் தொடர்ந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
ADDED : நவ 27, 2025 10:15 PM

மதுரை: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் தொடர்ந்த வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்துள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார், திருச்சி மாவட்ட எஸ்பியாக இருந்த போதே, ஒரு வழக்கு ஒன்றில் சீமானுடன் மோதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரமாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தனர். திருச்சி டிஐஜி ஆக பணிபுரிந்த வருண்குமார், தற்போது சென்னையில் சிபிசிஐடி டிஐஜி ஆக பணியாற்றி வருகிறார்.
இவர், திருச்சி 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் '' தன் மீதும், குடம்பத்தினர் மீதும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தூண்டுதலின் பேரில் நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புகின்றனர். இது தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து இருந்தார்.
தொடர்ந்து வழக்கை ரத்து செய்யக்கோரி திருச்சி நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து, ஐகோர்ட் மதுரை கிளையில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், நீதிபதி எல். விக்டோரியா கவுரி பிறப்பித்த உத்தரவு: அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை முறையாக நிறைவேற்றினால் பிரச்னை இல்லை. அதிகாரத்தில் உள்ளவர்களை விமர்சிக்க அரசியல்வாதிகளுக்கு உரிமை உள்ளது. இது போன்ற விவகாரங்களில் கீழமை நீதிமன்றங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மனு அனுமதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

