எட்டு தொகுதி தாருங்கள்: கூட்டணியில் வாசன் கேட்பு
எட்டு தொகுதி தாருங்கள்: கூட்டணியில் வாசன் கேட்பு
UPDATED : பிப் 25, 2026 06:14 AM
ADDED : பிப் 25, 2026 06:06 AM

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள, த.மா.கா.,வுக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கும்படி, அக்கட்சி தலைவர் வாசன் வலியுறுத்தி உள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வுக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைக்க, இரு கட்சிகளின் துாதராக, ஜி.கே.வாசன் செயல்பட்டார்.
ஆனால் கூட்டணி அமையவில்லை. பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., இடம் பெற்று, 3 லோக்சபா தொகுதிககளில், சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உருவாகி உள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை, சென்னையில் உள்ள அவரது வீட்டில், ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். அப்போது த.மா.கா., போட்டியிட விரும்பும், 12 தொகுதிகளின் பட்டியலை வழங்கி, அதில், எட்டு தொகுதிகளை ஒதுக்கி தரும்படி கேட்டுள்ளார். வாசனுடன் வந்த தொழில் அதிபர், 'உங்களுக்கும், பிரதமர் மோடிக்கும் விசுவாசமாக இருக்கிற வாசனுக்கு, ராஜ்யசபா 'சீட்' வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கு பழனிசாமி, 'சட்டசபை தேர்தலில், ஐந்து தொகுதிகளை ஒதுக்குவதாகவும், அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் தருவதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் த.மா.கா.,விற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி தரும்படி, தேர்தல் கமிஷனுக்கு ஜி.கே.வாசன் கடிதம் எழுதி உள்ளார்.
- நமது நிருபர் -

