எம்.எல்.ஏ.,க்களை கலங்கடித்த 'வாஸ்து' திருப்பூரில் 3வது முறையாக ஆபீஸ் திறப்பு
எம்.எல்.ஏ.,க்களை கலங்கடித்த 'வாஸ்து' திருப்பூரில் 3வது முறையாக ஆபீஸ் திறப்பு
ADDED : மார் 05, 2026 03:53 AM

திருப்பூர்: 'வாஸ்து' சரியில்லாததால், திருப்பூர் தெற்கு தொகுதிக்கு, மூன்றாவது முறையாக புதிய இடத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டு, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.
ஒரே தொகுதியாக இருந்த திருப்பூர் சட்டசபை தொகுதி, வடக்கு மற்றும் தெற்கு என இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
புதிய அலுவலகம் கடந்த 2011ல் முதன் முறையாக தேர்தலை சந்தித்த திருப்பூர் தெற்கு தொகுதியில், மா.கம்யூ., வேட்பாளராக களம் கண்ட தங்கவேல் வெற்றி பெற்றார்.
அவர், தாராபுரம் சாலை, தண்ணீர் தொட்டி வளாகத்தில் இருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடத்தை, தன் அலுவலகமாக பயன்படுத்தினார்.
அவரது பதவிக் காலத்தில், பல்லடம் சாலை, கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த வருவாய் துறைக்குச் சொந்தமான இடத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டப்பட்டது. அதன்பின், அதை பயன்படுத்தினார்.
தொடர்ந்து, 2016ல் நடந்த தேர்தலில், மீண்டும் போட்டியிட்ட தங்கவேல் தோல்வி அடைந்தார். அ.தி.மு.க., வேட்பாளர் குணசேகரன் வெற்றி பெற்றார்.
'எம்.எல்.ஏ., அலுவலகத்தில் 'வாஸ்து' குறைபாடு உள்ளது. அதனால் தான், தங்கவேலு தோல்வி அடைந்தார்' என்ற கருத்து, அரசியல்வாதிகள் மத்தியில் நிலவியது.
இதனால், குணசேகரன் அந்த அலுவலகத்தில், பல்வேறு மாற்றங்களைச் செய்து, தன் அலுவலக பணிகளை மேற்கொண்டார். ஆனாலும், அந்த அலுவலகத்தை தொடர்ந்து பயன்படுத்துவதை தவிர்த்தார்.
சென்டிமென்ட் கடந்த 2021ல் நடந்த தேர்தலில், தி.மு.க., சார்பில், செல்வராஜ் எம்.எல்.ஏ., ஆனார்.
ஆனால், 'வாஸ்து' சென்டிமென்ட் காரணமாக, அவரும் அந்த அலுவலகத்தைப் பயன்படுத்தவில்லை. தன் கட்சி அலுவலகத்தையே, எம்.எல்.ஏ., அலுவலகமாக பயன்படுத்தினார்.
தற்போது, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம், மூன்றாவது முறையாக, புதிய இடமான, பார்க் சாலையில், 1.07 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. கலெக்டர் மணிஷ் நாரணவரே, இதை திறந்து வைத்தார்.

