வருமான வரி ஊழியர் சம்மேளன தலைவராக வெங்கடேசன் தேர்வு
வருமான வரி ஊழியர் சம்மேளன தலைவராக வெங்கடேசன் தேர்வு
ADDED : செப் 28, 2024 10:35 PM
சென்னை:வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின், 32வது அகில இந்திய மாநாடு, கோல்கட்டாவில், கடந்த 20 முதல் 24ம் தேதி வரை நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சி.ஐ.டி.யு., அகில இந்திய பொதுச்செயலரும், முன்னாள் எம்.பி.,யுமான தபன் சென் சிறப்புரை ஆற்றினார். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் யாதவ் முன்னிலை வகித்தார்.
முதன்மை தலைமை வருமான வரி ஆணையர் தீக் ஷித் மாநாட்டை துவங்கி வைத்தார்.
ஜே.சி.எம்., செயலர் ஷிவ் கோபால் மிஸ்ரா, வருமான வரி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் அரவிந்த் திரிவேதி மற்றும் வருமான வரி ஓய்வூதியர்கள் சங்க அகில இந்திய பொதுச்செயலர் அசோக் சாலுங்கே ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் தலைமையுரை ஆற்றினார்.
பழைய ஓய்வூதியம், 8வது மத்திய ஊதியக்குழு, பிராந்திய அடிப்படையில் மத்திய அரசு பணி நியமனம், பெண் ஊழியர் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி, தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அடுத்த மாநாட்டை, தமிழகம் மற்றும் புதுச்சேரி வட்டம் சார்பில் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக வெங்கடேசன், பொதுச்செயலராக ரூபக் சர்க்கார், பொருளாளராக லக்ஷ்மன் ஏராம் ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநில தலைவர் ஷியாம்நாத், அகில இந்திய சம்மேளனத்தின் உதவிச் செயலராகவும், மாநில துணைத் தலைவர் அர்ச்சனா, அகில இந்திய பெண்கள் குழு உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.